பீகார் சட்டசபை தேர்தலில் வெல்லப் போவது யாரு? நாளை வாக்கு எண்ணிக்கை
பாட்னா: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளிலும் காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா, இந்துஸ்தான் மோர்ச்சா ஆகியவை இணைந்திருந்தன. இதில் பா.ஜ.க. 160, லோக் ஜனசக்தி 40, ராஷ்டிய லோக் சமதா 23, மோர்ச்சா 20 இடங்களில் போட்டியிட்டன.
தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையையொட்டி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் இரு கூட்டணிகளுமே ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றன. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைத் தழுவினால் அது பிரதமர் மோடிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications