பீகார் SIR நடவடிக்கைக்கு நடுவே.. "டாக் பாபு" என்ற நாய்க்கு இருப்பிட சான்றிதழ்! வினோதத்தின் உச்சம்
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குச் சார் எனப்படும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு (Bihar SIR process) பணிகள் நடந்து வருகின்றன. தான் வாக்காளர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆவணங்களை மக்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கிடையே அங்கு "டாக் பாபு" என்ற பெயரில் ஒரு கோல்டன் ரெட்ரீவர் வகை நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பீகாரில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அங்குத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்து இருக்கிறது. அரசியல் களம் ஒரு பக்கம் இருக்க.. அங்குத் தேர்தல் ஆணையமும் கூட சார் எனப்படும் சிறப்பு வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையைச் செயல்படுத்தி வருகிறது.

நாய்க்கு இருப்பிட சான்று
இதற்கிடையே பீகாரில் நாய் ஒன்றுக்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. அந்த சான்றிதழை உடனடி சம்பந்தப்பட்ட அதிகாரி ரத்து செய்துவிட்டார். யாரோ சில விஷமிகள் வேண்டுமென்றே இதைச் செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், "டாக் பாபு" என்று அந்த நாய்க்கு வழங்கப்பட்ட இருப்பிட சான்றிதழ் குறித்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அந்த சான்றிதழில் தந்தை பெயர் "குட்டா பாபு", தாய் பெயர் "குட்டியா தேவி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டாக் பாபு மசவுரி தபால் நிலைய பகுதியில் வசிப்பதாகவும் இருக்கிறது. வருவாய் அலுவலர் முராரி சவுகான் என்பவர் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டு அந்த சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்தச் சம்பவம் பேசுபொருள் ஆன நிலையில், அதிகாரிகள் இது குறித்து விசாரித்துள்ளனர்.
எப்படி நடந்தது!
அதில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் ஆவணங்களைக் கொடுத்து அதன் மூலம் இந்த சான்றிதழ் பெறப்பட்டது தெரியவந்தது. அந்த பெண்ணின் ஆதார் கார்டு மற்றும் பிற ஆவணங்களைப் பயன்படுத்தி யாரோ மோசடி செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் தியாகராஜன் கூறுகையில், "இது மிகவும் தீவிரமான விஷயம். யாரோ விஷமி இப்படி ஒரு விஷயத்தைச் செய்துள்ளார்.

என்ன நடந்தது!
ஜூலை 24ம் தேதி மாலை 3.56 மணிக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், இரண்டே நிமிடங்களில், அதாவது 3.58 மணிக்கு இது கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளோம்.. சைபர் க்ரைம் போலீஸ் இது குறித்து விசாரித்து வருகிறது. இதை விண்ணப்பித்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
இந்த சம்பவம் இணையத்தில் பல விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வழங்குவதில் எந்தளவுக்கு அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதையே பலரும் சுட்டிக்காட்டினர்.
பீகார் தேர்தல்
பீகாரில் தேர்தலை முன்னிட்டு சார் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வரும் நிலையில், இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. சார் எனப்படும் சிறப்பு வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கையை ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்தச் சூழலில் சார் நடவடிக்கையில் ஏற்கப்படும் ஆவணங்களில் ஒன்றான நிரந்தர இருப்பிட சான்றிதழ் நாய்க்கு வழங்கப்பட்டுள்ளது அங்கு அரசியல் அரங்கிலும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதை வைத்தும் அங்குள்ள எதிர்க்கட்சிகள் சார் நடவடிக்கையை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications