இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தி குக்கரால் தாக்கிய பிலால் மாலிக்!

இதையடுத்து உள்ளே புகுந்த போலீஸ் படை, லட்சுமணனை மிகவும் சிரமப்பட்டு மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் நேற்று நடந்த பரபரப்புச் சம்பவம் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்துக் கூறப்படுவதாவது...
ஐ.ஜி. கண்ணப்பன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தமிழக போலீசார் மற்றும் ஆந்திர போலீசார் இணைந்து தீவிரவாதிகள் பதுங்கி இருந்த புத்தூர் பகுதிக்கு விரைந்தனர்.
பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் தங்கியிருந்த வீட்டை நேற்று அதிகாலை நாலரை மணிக்கு அடைந்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் கதவைத் தட்டினார். உள்ளேயிருந்து பெண் குரல் யார் என்று கேட்டுள்ளது. அதற்கு பால்காரர் என்று லட்சுமணன் கூறயுள்ளார். வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை, பிறகு வாருங்கள் என்று அப்பெண் பதில் கொடுத்துள்ளார்.
அப்போது உள்ளே லைட் போடப்பட்டது. ஒரு ஆண் நடந்து வந்துள்ளார். அவரைப் பார்த்த இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வருவது பிலால் மாலிக்தான் என்பதை அறிந்து கொண்டார். பிலால் மாலிக்கும் கதவைத் திறந்து பார்த்துள்ளான். அப்போது அவனை வெளியே இழுக்க முயன்றார் இன்ஸ்பெக்டர் லட்சுமணன். ஆனால் பிலால் மாலிக் சுதாரித்துக் கொண்டு லட்சுமணனை உள்ளே இழுத்து கதவையும் மூடி விட்டான்.
உள்ளே சிக்கிக் கொண்ட லட்சுமணனை பிலால் மாலிக் சரமாரியாகத் தாக்கியுள்ளான். தனது கையில் இருந்த கத்தியால் அவரை தலையில் குத்தியுள்ளான். மேலும் வீட்டில் இருந்த குக்கரை எடுத்தும் பலமாக தாக்கினான்.
இதில் படுகாயமடைந்தார் லட்சுமணன். உயிர் தப்ப அவர் போராட்டம் நடத்த வேண்டியதாகி விட்டது. அவரது குரல் கேட்டு வெளியில் இருந்த போலீஸார் திபுதிபுவென உள்ளே புகுந்தனர். அதற்குள் பிலால் மாலிக் உள்ளே இருந்த அறைக்குள் புகுந்து அதை பூட்டிக் கொண்டான். மேலும் காஸ் சிலிண்டரையும் திறந்து விட்டான். அங்கிருந்த இஸ்மாயிலும் அவனும் வீட்டில் வெடிகுண்டுகள் இருக்கின்றன, வெடிக்க வைத்து விடுவோம் என்று மிரட்டியதால் போலீஸார் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை. லட்சுமணனை மட்டும் மீட்டுக் கொண்டுவெளியேறி விட்டனர்.
படுகாயமடைந்துள்ள இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications