லோக்சபாவில் கடும் அமளிக்கு இடையே நிலம் கையகப்படுத்தும் மசோதா அறிமுகம்
டெல்லி: நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் தொடர்பான மசோதா லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்கட்சியினர் கடும் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
மசோதாவை அறிமுகம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், ஆம் ஆத்மிகட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கியது. இரண்டாம்நாளான இன்று நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவிற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜ்யசபாவில் காலை முதலே கடும் அமளி நிலவியது.
ஆனால் லோக்சபாவில் ஆளும் பாஜக அரசுக்கு பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் இருப்பதால் அமளி குறைவாகவே இருந்தது.
லோக்சபாவில் மசோதாவை அறிமுகம் செய்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பிரேந்திர சிங், "லோக்சபா உறுப்பினர்களின் எதிர்ப்பை கவனித்தில் கொள்கிறேன். மசோதா மீது விவாதம் நடக்கும் போது விரிவாக ஆலோசிக்கலாம்" என்றார்.
நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா குறித்த விவகாரத்தை ராஜ்யசபாவில் இன்று கையிலெடுத்த எதிர்கட்சிகள், அந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், ராஜ்யசபாவில் கடும் அமளி நிலவியது.












Click it and Unblock the Notifications