8 மாநிலங்களில் 12 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்: 4ல் பாஜக.. 2ல் மட்டும் காங். வெற்றி
டெல்லி: கர்நாடகா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் நடைபெற்ற 12 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் அதிகபட்சமாக 7 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
பீகார், உத்தரபிரதேசம், திரிபுரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் 12 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று அந்த மாநிலங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
பீகார் மாநிலம் ஹர்லாக்கி தொகுதிக்கான சட்டசபை இடைதேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான மெகா கூட்டணி வேட்பாளர் தோல்வி அடைந்தார். பா.ஜ.க. கூட்டணி கட்சியான ராஷ்டிரீய லோக் சமதா வேட்பாளர் 18,650 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் தோல்வியை சந்தித்துள்ளது நிதிஷ் குமார் கூட்டணி.

முசாபர்நகர்
உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட பிகாபூர், சஹரன்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தேவ்பந்த் மற்றும் முசாபர்நகர் ஆகிய 3 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. தேவ்பந்த் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், முசாபர்நகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரும் வெற்றி பெற்றனர். இவ்விரு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

வடகிழக்கு
வடகிழக்கிலுள்ள, திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்துக்கு உட்பட்ட பிர்கன்ஜ் தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தோல்வியை தழுவினார்.

சிவசேனா
மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையின் பால்கர் தொகுதிக்கான சட்டசபை இடைதேர்தலில் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா வேட்பாளர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார்.

தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்துக்கு உட்பட்ட நாராயண்கட் தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிரீய சமிதியின் வேட்பாளர் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றார்.

கர்நாடகா
கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரின், ஹெப்பால், தேவதுர்கா மற்றும் பீதர் ஆகிய 3 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சியான காங்கிரஸ் பீதர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற 2 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றிக் கனியை தட்டிப்பறித்தது. தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் தோல்வி அடைந்து டெபாசிட்டை இழந்தது.

பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தின் கதூர் சாஹிப் தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தலில் பாஜகவின் கூட்டணி கட்சியான, சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் தோல்வி அடைந்தார். முக்கிய எதிர் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

மத்திய பிரதேசத்திலும் வெற்றி
மத்தியபிரதேச மாநிலம் மயிஹர் தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார். ஆக மொத்தத்தில் இந்த தேர்தல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு நல்ல உற்சாகத்தை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications