சுஷ்மா என்ன ஆண்டர்சன், குவாத்ரோச்சிக்கு செய்தது மாதிரியா உதவி செய்தார்.. "அடடே" அமீத் ஷா!
டெல்லி: லலித் மோடிக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செய்த உதவி ஒன்றும் சட்டவிரோதமானது அல்ல. அதைவிட வாரன் ஆண்டர்சன், குவாத்ரோச்சிக்கு செய்யப்பட்ட உதவி போல நிச்சயமாக இது இல்லை என்று காங்கிரஸ் கட்சியை கிண்டலடித்துள்ளார் பாஜக தலைவர் அமீத் ஷா.
இந்தியாவில் நிதி முறைகேடுகளைச் செய்து விட்டு அதுதொடர்பான வழக்குகளை நேருக்கு நேரில் சந்திக்காமல் லண்டனுக்குத் தப்பிப் போய் வசித்து வருகிறார் முன்னாள் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடி. இந்த நிலையில் லலித் மோடியின் மனைவிக்கு போர்ச்சுகல் நாட்டில் புற்று நோய் தொடர்பான அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது. இதுதொடர்பான பயண ஆவணங்கள் தொடர்பாகவும், இங்கிலாந்தை விட்டு போர்ச்சுகல் நாட்டுக்குச் செல்லவும், இங்கிலாந்து அரசுடன் பேசி உதவுமாறு அவர் சுஷ்மாவிடம் போனில் தொடர்பு கொண்டு உதவி கோரினார். இதை ஏற்று சுஷ்மாவும் இங்கிலாந்து எம்.பி. கீத் வெய்ஸ் மூலமாக அந்த நாட்டு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி விதிமுறைப்படி இங்கிலாந்து அரசு செயல்படலாம். இங்கிலாந்திருந்து போர்ச்சுகல் செல்ல லலித் மோடிக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளிக்க முடிவு செய்தால், அதை இந்திய அரசு எதிர்க்காது என்று சுஷ்மா கூறியிருந்தார். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சுஷ்மா செய்தது உண்மை என்றால் அவரை உடனடியாக பதவியிலிருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு மத்திய அமைச்சர்கள் பலரும், பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக தலைவர் அமீத் ஷா கூறுகையில், லலித் மோடிக்கு, வாரன் ஆண்டர்சன், குவாத்ரோச்சி ஆகியோருக்குக் கிடைத்தது போன்ற உதவி கிடைக்கவில்லை. இதுதொடர்பாக சுஷ்மாவும் டிவிட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரு இந்தியக் குடிமகன் தனது மனைவியின் புற்றுநோய் சிகிச்சையின்போது உடன் இருப்பதற்கு அவர் உதவியுள்ளார். இங்கிலாந்து நாட்டு விதிமுறைப்படிதான் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் இங்கிலாந்துக்கு கூறியுள்ளார். இதில் என்ன தவறு உள்ளது. சுஷ்மா செய்ததில் தவறு ஏதும் இல்லை என்று கூறியுள்ளார் அமீத் ஷா.
இதேபோல ஆர்.எஸ்.எஸ். தலைமையும் கூட சுஷ்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே இந்த விவகாரத்தை பிரதமர் மோடியும் அப்படியே விட்டு விடுவார் என்றே தெரிகிறது.