கை கட்சிக்கு “வெறுங்கை”.. மம்தாவுக்கும் நஷ்டம்.. மேற்கு வங்கத்தை அடித்து தூக்கும் பாஜக.. கணிப்பு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நியூஸ் 18 நடத்திய கருத்துக்கணிப்பு ரிசல்ட் காங்கிரஸ் கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும், மம்தா பானர்ஜிக்கும் பேரதிர்ச்சி கொடுத்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நியூஸ் 18 - சி.என்.என் இணைந்து நாடு முழுவதும் சர்வே நடத்திய நிலையில், அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து நியூஸ் 18 குழுமம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் மொத்தம் 42 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மற்றும் பிற கட்சிகளுக்கு மேற்கு வங்கத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி வாய்ப்பு இருக்காது என்று நியூஸ் 18 கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரு சீட் கூட கிடைக்காது என்றும், மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணிக்கு வெறுங்கை தான் என்றும் நியூஸ் 18 கணிப்பு தெரிவிக்கிறது. இது காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஷாக் கொடுத்துள்ளது.
நியூஸ் 18 தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின் படி மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி மற்றும் மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரசுக்கு தலா 42 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும் சீட் எண்ணிக்கையில் பாஜக கூட்டணிக்கே லாபம் என கருத்துக்கணிப்பு மூலம் தெரியவருகிறது.
மேலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 14 சதவீத வாக்குகளையும் இதர கட்சிகள் 2 சதவீத வாக்குகள் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் - திரிணாமுல் கூட்டணி அமைக்காதது இரு கட்சிகளுக்குமே பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறது இந்தக் கணிப்பு.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகவும், வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் தனித்து போட்டியிடும் என்றும் சமீபத்தில் அறிவித்தார். இந்த தனித்துப் போட்டி முடிவு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என இரு கட்சிகளையும் பதம் பார்த்துள்ளது.
2019 ஆம் ஆண்டில், பாஜக 18 இடங்களில் வென்றிருந்தது. அப்போது திரிணாமுல் 22 இடங்களைப் பெற்றது. 2021 இல், மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிக்கு அழைத்துச் சென்று, 215 சீட்களில் வென்றார். பாஜக தீவிர பிரச்சாரம் செய்த போதிலும் 77 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. ஆனால், லோக்சபா தேர்தலில் நிலை மாறியிருப்பதாக கூறுகிறது நியூஸ் 18 கருத்துக்கணிப்பு.












Click it and Unblock the Notifications