தேர்தல் நடத்தை விதிமீறல்: ஆம் ஆத்மி மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை
டெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மாநில தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி முதல்வராக உள்ள குஜராத் மாநிலம் உண்மையிலேயே வளார்ச்சி அடைந்துள்ளதா என்பதை நேரில் பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

16வது லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தேதியான அன்று தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறியதாக கெஜ்ரிவாலை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரின் நடவடிக்கைகளின் பிண்ணனியில் அம்மாநில அரசு உள்ளதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
இதனால் பாஜக, ஆம் ஆத்மியினரிடையே மோதல் உண்டானது. இதில் டெல்லி, லக்னோ பாஜக அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. 5 பேர் காயமடைந்தார்கள். மேலும், ஆம் ஆத்மியினர் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஆம் ஆத்மியின் இச்செயல்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும், உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரி அமேயா அபியங்கர் ஆம் ஆத்மி கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பங்கஜ் குப்தா பதில் அனுப்பினார். அதில், குஜராத் மாநிலத்தில் எங்கள் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தப்பட்டதால் உடனடி பதிலடியாக இந்த போராட்டம் நடந்தது. இது திட்டமிட்டு நடத்திய போராட்டம் அல்ல. தங்கள் கட்சி வேட்பாளருக்காக நடந்த பிரசாரமும் அல்ல. எங்கள் கட்சி தேர்தல் நடத்தை விதிகளை மதிக்கிறது. அதனை அமல்படுத்த தேர்தல் கமிஷனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என விளக்கமளித்திருந்தார்.
ஆம் ஆத்மியின் பதிலைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி அபியங்கர் கூறும்போது, ‘‘ஆம் ஆத்மி கட்சியின் பதில் கிடைத்துள்ளது. அதனை பரிசீலித்து வருகிறோம். இதுதொடர்பான எங்கள் அறிக்கையை தேர்தல் கமிஷனுக்கு அனுப்புவோம்'' என்றார்.
மேலும், ‘டெல்லியில் பாரதீய ஜனதா அலுவலகத்திற்கு முன் கடந்த 5-ம் தேதி ஆம் ஆத்மியினர் பாரதீய ஜனதா கட்சியினருடன் மோதலில் ஈடுபட்டனர். இவ்விவகாரத்தில் ஆம் ஆத்மி தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டது. அக்கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும். ஆம் ஆத்மியின் பதிலில் திருப்தி இல்லை' என அபியங்கர் கூறியுள்ளார்.
டெல்லி மாநில தேர்தல் அதிகாரி விஜய் தேவ், மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கையை பெற்ற பின்னர் அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications