அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு- கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக யுத்தம்!
பெங்களூர்: கர்நாடகா மாநில அரசின் ஒப்பந்தங்களில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீடு வழங்க அம்மாநில ஆளும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதற்கு எதிராக பாஜக போர்க்கொடி தூக்கி இருக்கிறது. கர்நாடகா மாநில அரசு முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றினால் நீதிமன்றத்துக்கு செல்வோம் என மிரட்டல் விடுத்துள்ளது பாஜக.
கர்நாடகாவில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அனைவருக்கும் அரசு ஒப்பந்தங்களில் கட்டாயம் 4% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது. இதனையடுத்து சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். பின்னர் சட்ட்மாக அமலுக்கு வரும்.

ஆனால் கர்நாடகா பாஜக இந்த முயற்சிக்கு மிக கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா கூறுகையில், முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீட்டை காங்கிரஸ் அரசு அமல்படுத்தினல் உக்கிர போராட்டத்தை பாஜக நடத்தும். சட்டசபைக்குள்ளேயும் சட்டசபைக்கு வெளியேயும் பாஜகவின் போராட்டம் தொடரும். முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினரில் மட்டும்தான் ஏழைகள் இருக்கின்றனரா? இந்துக்களில் ஏழைகளே இல்லையா?
கர்நாடகா மாநில மக்களை மத அடிப்படையில் பிரிக்கும் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவகுமாரின் சதித் திட்டத்தை பாஜக முறிக்கும். கர்நாடகா மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கிறது காங்கிரஸ் அரசு.
பாஜக, முஸ்லிம் மக்களுக்கு எதிரான கட்சி அல்ல; ஆனால் முஸ்லிம்களை வாக்கு வங்கியாக தக்க வைக்கும் காங்கிரஸின் அரசியல் போக்கையே பாஜக கடுமையாக எதிர்க்கிறது. இந்த நாட்டின் ஜனாதிபதியாக அப்துல் கலாம் என்ற இஸ்லாமியரை பதவியில் அமர்த்தியது பாஜகதானே தவிர காங்கிரஸ் அல்ல.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில்தான் நஜ்மா ஹெப்துல்லா ஆளுநராக நியமிக்கப்பட்டார்; நீதிபதி அப்துல் நஸீர் ஆளுநராக்கப்பட்டார்; முகமது ஆரீப் கான் ஆளுநராக்கப்பட்டார் என்பதை காங்கிரஸ் கட்சியினர் நினைவில் வைத்திருக்க வேண்டும். பிஸ்மில்லா கானுக்கு பாரத ரத்னா விருது தந்ததும் மத்தியில் ஆளும் பாஜக அரசுதான். இவ்வாறு விஜயேந்திரா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications