15 வயது சிறுமியை விலைக்கு வாங்கி காரில் வைத்து பலாத்காரம்: பாஜக நிர்வாகி, 5 பேர் கைது
போபால்: சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் மத்திய பிரதேச மாநில உள்ளூர் பாஜக தலைவர் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநில தலைநகர் குவகாத்தியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம், வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய ஒரு கும்பல் மும்பை விபச்சார விடுதியில் சமீபத்தில் விற்பனை செய்தது.
ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை
மும்பையில் பலரின் கொடூர ஆசைக்கு உட்படுத்தப்பட்ட அந்த சிறுமி, ராஜா என்ற இடைத்தரகரால் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரிலுள்ள விபச்சார கும்பலுக்கு விற்பனை செய்யப்பட்டார். இந்தூரில் மும்தாஜ் என்ற விபச்சார கும்பல் தலைவி சிறுமியை விலை கொடுத்து வாங்கினார்.
இதன்பிறகு, சிறுமியை ரூ.4 ஆயிரத்துக்காக நான்கு பேரிடம் விபச்சாரம் செய்ய மும்தாஜ் அனுப்பி வைத்தார்.
அதிகாரிகள், அரசியல்வாதிகள்
மத்திய பிரதேச மாநிலம், தேவாஸ் மாநகராட்சியின் வருவாய் இன்ஸ்பெக்டர் சபீர், மாநகராட்சி ஊழியர் ரோகித் ஜலோடியா, பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் ஹமீத் சதார் மற்றும் யாகுப் செய்க் ஆகிய நான்கு பேரும் மும்தாஜிடம் நாலாயிரம் ரூபாய் கொடுத்து சிறுமியை வாங்கி சென்றுள்ளனர்.
காரில் வைத்து கொடூரம்
லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்தால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் ஓடும் காரில் வைத்தே சிறுமியை நால்வரும் பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி காரில் பயணித்தபடியே சிறுமியை சபீர் பலாத்காரம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து காரில் இருந்த பிற மூன்று பேரும் அடுத்தடுத்து சிறுமியிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளனர்.
சபாஷ் போலீஸ்
இந்த முயற்சி நடந்தபோது கார் உஜ்ஜயின் சாலையில் சென்று கொண்டிருந்தது. அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சிறுமி காருக்குள் இருப்பதை பார்த்து சந்தேகப்பட்டு காரை தடுத்து நிறுத்தினர். அப்போது சிறுமி நடந்த விஷயங்களை போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
பாஜகவிலிருந்து டிஸ்மிஸ்
கைதானவர்கள் அவர்கள் அளித்த தகவலின் பேரில் மும்தாஜ் மற்றும் இடைத்தரகர் ராஜா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து, பாஜக மாநில தலைமைக்கு தகவல் கிடைத்ததும், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகளை கட்சியை விட்டு டிஸ்மிஸ் செய்து பாஜக உத்தரவிட்டுள்ளது.