ம.பி.யில் கமல்நாத் அரசை கவிழ்த்தது மோடிதான்.. யாரிடமும் சொல்லாதீர்.. பொது மேடையில் பேசிய பாஜக தலைவர்
இந்தூர்: காங்கிரஸ் தலைமையிலான கமல்நாத் அரசு மத்திய பிரதேசத்தில் கவிழ்ந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி முக்கிய பங்காற்றியிருந்தார் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் விஜய் வர்கியா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தேர்தல் தோல்வி கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை சுமார் 13 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜகவின் சிவராஜ் சிங் சவுகானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிருப்தி
இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவை பாஜக கோழி அமுக்குவது போல் அமுக்கியது, எம்பி பதவி கொடுப்பதாக கூறி அவரை பாஜகவுக்கு அழைத்தது. இதனால் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேருடன் அவர் பாஜகவில் இணைந்தார்.
பெரும்பான்மை இல்லை
எனவே கமல்நாத் அரசிற்கு பெரும்பான்மை இல்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து அந்த மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் கமல்நாத்திற்கு பெரும்பான்மை இல்லை. இதையடுத்து கமல்நாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபித்ததில் முதல்வராக சிவராஜ் சவுகான் தேர்வு செய்யப்பட்டார்.
விஜய வர்கியா
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு பாஜகதான் காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்த நிலையில் அது உண்மைதான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் பாஜகவின் விஜய வர்கியா. இந்தூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் அவ்வாறு தெரிவித்தார்.
@KailashOnline disclosure @narendramodi played important role in fall of @OfficeOfKNath government @INCIndia @ndtvindia @ndtv @vinodkapri @rohini_sgh #BJP #Congress pic.twitter.com/GvNhic9cv8
— Anurag Dwary (@Anurag_Dwary) December 16, 2020
பிரதமர்தான் காரணம்
அவர் பேசுகையில் நான் சொல்வதை யாரிடமும் சொல்லாதீர்கள். இதுவரை இந்த விஷயத்தை நான் யாரிடமும் சொன்னதில்லை. முதல்முறையாக மேடையில் பொதுமக்கள் முன்பாக சொல்கிறேன். மத்திய பிரதேசத்தில் கமல்நாத்தை அரசை கவிழ்த்ததில் யாரேனும் முக்கிய பங்காற்றினார்கள் என்றால் அது வேறு யாருமில்லை பிரதமர் நரேந்திர மோடிதான். ஆனால் தவறாக தர்மேந்திர பிரதான் என பலர் நினைத்துள்ளார்கள். அது தவறு என விஜய வர்கியா "வாக்குமூலம்" அளித்துள்ளார்.