சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி: சுப்பிரமணியன் சுவாமி
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும் என்றும், ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி என்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுகுறித்து கூறுகையில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10-ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும். ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் கொடூரத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். தமிழகத்தில் ஜிகாதி தீவிரவாத அமைப்புகள் அதிகரித்துவிட்டதாகவும், அவற்றை ஒடுக்குவதில் மாநில அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த விஷயத்தில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த வித வித்தியாசமும் இல்லை. தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரக்கூடும் என்பதை முன்கூட்டியே அனுமானிக்க முடியாது. அடுத்து வரவிருக்கும் புதிய அரசு, உருவாகி வரும் ஜிகாதிக்களை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.
மேலும், மதத்தின் பெயரால் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. அப்படி ஒரு அரசு செயல்படுமானால் அதை கலைக்கவும் மத்திய அரசு தயங்கக் கூடாது என கூறினார்.