டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை! ஆம் ஆத்மிக்கு 17 தானாம்: கருத்துக் கணிப்பு
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏபிபி-நீல்சன் நிறுவனம் சார்பில் பொதுமக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, டெல்லியில் உள்ள மொத்தம் 70 தொகுதிகளில் பாஜக 45 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக ஆம் ஆத்மி கட்சி 17 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் முதல்வர் ஆவதற்கு 43% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாகவே பாஜகவின் ஹர்ஷவர்தனுக்கு 39% பேர் பரிந்துரைத்துள்ளனர்.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ளனர். 38 சதவீதத்தினர் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் எனக் கூறியுள்ளனர். அரவிந்த் கேஜரிவாலின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாக 65 சதவீதம் பேரும், பிரதமர் மோடியின் ஆட்சி திருப்திகரமாக இருப்பதாக 74 சதவீதம் பேரும் பதிவு செய்துள்ளனர்.