கர்நாடக இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வி தொடர்கிறது.. பெங்களூரிலும் வலு இழக்கிறது!
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில், காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, நடைபெற்ற 2 இடைத் தேர்தல்களிலும், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு தோல்வி பரிசாக கிடைத்துள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு மே 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பெங்களூரிலுள்ள ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கும், போலி வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதால், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவில்லை.
இதில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கு மே 28ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-மஜத இணைந்து கூட்டணி அமைத்திருந்தாலும் கூட, ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில், காங்கிரஸ், மஜத தனித்தனியாக களமிறங்கின. பாஜகவுடன் சேர்த்து அங்கு மும்முனை போட்டி நிலவியது.

வாக்கு பிரிப்பால் கவலையில்லை
மஜத வாக்குகளை பிரித்தபோதிலும் கூட16 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா 1,08, 064 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் முனிராஜு கவுடா 82,572 வாக்குகளும், மஜத வேட்பாளர் ராமச்சந்திரா 60,360 வாக்குகள் பெற்றனர். இதனால், காங். வேட்பாளர் முனிரத்னா 25492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜெயநகரில் ஜெய கோஷம்
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஜெயநகர் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. காங்கிரசின் சவுமியா ரெட்டி 54,457 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜகவின் பிரகலாத் 51,568 வாக்குகள் பெற்றார். பிறர் 1861 வாக்குகளை பெற்றனர். 2889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சவுமியா ரெட்டி. மஜத போட்டியில் இருந்து விலகி இருந்தது.

இருந்த தொகுதியை இழந்த பாஜக
ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி ஏற்கனவே காங்கிரசிடம் இருந்தது. அதை மீண்டும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பாஜகவை பொறுத்தளவில் தன்னிடமிருந்த ஜெயநகர் தொகுதியை காங்கிரசிடம் இழந்துள்ளது. பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 78 இடங்களை கைப்பற்றியிருந்தது. ஆனால், ஜமகண்டி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காங்கிரசின், சித்துநியாமகவுடா (63), சில தினங்கள் முன்பாக நடைபெற்ற சாலை விபத்தில் பலியானார்.

காங்கிரஸ் பலம்
எனவே, 77ஆக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் குறைந்திருந்தது. ராஜராஜேஸ்வரி நகர் வெற்றியின் மூலம் மீண்டும் காங்கிரஸ் 78 எம்எல்ஏக்களை பெற்றது. ஜெயநகர் வெற்றியின் மூலம், காங்கிரஸ் பலம் 79ஆக உயர்ந்துள்ளது. பாஜகவை பொறுத்தளவில், பெங்களூரில் அதன் செல்வாக்கு குறைந்தபடி உள்ளது.
2008ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெங்களூரிலுள்ள 28 தொகுதிகளில், 17ஐ பாஜக வென்றது. ஆனால், இப்போதைய நிலையில், பாஜக 11 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.












Click it and Unblock the Notifications