டெல்லியில் வீட்டு வாசலில் வைத்து பாஜக எம்.எல்.ஏ.வை நோக்கி சுட்ட மர்ம ஆசாமி
டெல்லி: டெல்லியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் வசிக்கும் பாஜக எம்.எல்.ஏ. ஜிதேந்தர் சிங் ஷன்ட்டியை அவரது வீட்டுக்கு முன்பு வைத்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட முயன்றார். நல்லவேளையாக அவர் மீது குண்டு எதுவும் படவில்லை
பாஜக எம்.எல்.ஏ. ஜிதேந்தர் சிங் ஷன்ட்டி கிழக்கு டெல்லியில் உள்ள விவேக் விஹாரில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 6 மணிக்கு அவரது வீட்டு அழைப்பு மணியை யாரோ தொடர்ந்து அழுத்தியுள்ளனர். அழைப்பு மணி சத்தம் கேட்டு ஷன்ட்டி வெளியே வந்தபோது மர்ம நபர் ஒருவர் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். மற்ற இருவர் பைக் ஒன்றில் அமர்ந்திருந்தனர்.
சில ஆவணங்களில் கையெழுத்து வேண்டும் என்று அந்த நபர் ஷன்ட்டியிடம் தெரிவித்தார். ஷன்ட்டி அந்த ஆவணங்களை வாங்கிக் கொண்டு கையெழுத்திட வீட்டுக்குள் செல்ல முயன்றபோது அந்த நபர் துப்பாக்கியை எடுத்தார். இதை பார்த்த ஷன்ட்டி அவர் துப்பாக்கியால் சுடுவதை தடுக்க முயன்றார். இருப்பினும் அந்த மர்ம ஆசாமி ஷன்ட்டியை நோக்கி 3 முதல் நான்கு முறை சுட்டார்.
அதில் ஒரு குண்டும் ஷன்ட்டி மீது படவில்லை. இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் ஷனட்டி வீட்டுக்கு வெளியே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஷாதரா தொகுதி எம்.எல்.ஏ.வான அவரை கடந்த 2007ம் ஆண்டு மர்ம ஆசாமி தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.