அமர் 'அங்கிள்' திரும்பிடுவார் என்று பாஜக பயப்படுகிறது: அமித்ஷாவுக்கு அகிலேஷ் பதிலடி
லக்னோ: அமர் 'அங்கிள்' சமாஜ்வாதி கட்சிக்கு திரும்பிவிடுவார் என்ற அச்சம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளதாக உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவுடன், மிக நெருக்கமாக இருந்தவர், அமர்சிங். சமாஜ்வாதி கட்சியில் செல்வாக்குடன் விளங்கினார். ஆனால் முலாயம்சிங்கின் மகனான அகிலேஷ் யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2010ல், கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அதன்பின், ராஷ்டிரிய லோக் மஞ்ச் என்ற தனிக்கட்சியை, அமர்சிங் துவக்கினார்.

கடந்த லோக்சபா தேர்தலில், அஜித் சிங்குடன் கூட்டணி சேர்ந்து, பதேபூர் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார். இந்நிலையில் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் படுதோல்வியை சந்தித்தது. எனவே அமர்சிங்கை மீண்டும் சமாஜ்வாதிக்கு அழைத்துவர முலாயம்சிங் முயன்றுவருகிறார். இதற்காக இரு தலைவர்களும் அவ்வப்போது சந்தித்து பேசிவருகின்றனர்.
இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பழைய நண்பர்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டால் தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியாது. மக்களிடம் சென்று கட்சி சேர வேண்டும், அப்போதுதான் வெற்றிபெற முடியும் என்று தெரிவித்தார்.
அமித்ஷா கருத்து குறித்து அகிலேஷ் யாதவ் நிருபர்களிடம் கூறுகையில், "அமர்சிங் 'அங்கிள்' சமாஜ்வாதி கட்சிக்கு திரும்பிவிடுவாரோ என்ற அச்சம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. அவர் வருவாரோ இல்லையோ, அதற்குள்ளாக பாஜகவில் அதிர்வு ஏற்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications