குஜராத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை பிடிக்க முடியாது: பாஜக எம்.பி. கணிப்பு
டெல்லி: பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் குஜராத்தில் பாஜக வெல்லும் என கூறினாலும், பாஜக ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் ககடே, குஜராத்தில் பாஜக வெற்றி எளிதாக இருக்காது, இழுபறியாக இருக்கும் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அறுதி பெரும்பான்மையை விடுங்கள். பாஜகவால் ஆட்சியமைக்க தேவையான அளவுக்கு குறைந்த பட்ச எம்எல்ஏக்களை கூட பெற முடியாது. அதேபோல காங்கிரசும் மெஜாரிட்டியை நெருங்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் அவர்.
ஒருவேளை பாஜக மீண்டும் குஜராத்தில் ஆட்சியை பிடித்தால் அது நரேந்திர மோடியால்தான் இருக்கும். நான் 6 பேர் குழுவை குஜராத்திற்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் விவசாயிகள், ஹோட்டல் வெய்ட்டர்கள், தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் என பலதரப்பட்டவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அவர்கள் சர்வே படியும் எனது கணிப்புபடியும், பாஜக தனி மெஜாரிட்டியில் வெற்றி பெற முடியாது.
பாஜக, குஜராத்தில் 22 வருடங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்கத்தில் 25 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி செய்ததற்கு அடுத்தபடியாக குஜராத்தில் பாஜக சாதனைபடைத்துள்ளது. எனவே இயல்பாகவே எதிர்ப்பு அலை இருக்கும் என்றார் அவர்.