பாஜக எம்.பி.யின் மகனிடம் இருந்து ரூ.1.5 லட்சம் வாட்ச், பணத்தை கொள்ளையடித்த பெண் பாடிகார்ட்
மும்பை: மும்பையில் பாஜக எம்.பி.யின் மகன் மற்றும் அவரது என்.ஆர்.ஐ. நண்பரிடம் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண் பாதுகாவலர் மற்றும் அவரது டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
உத்தர பிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. கன்வர் சிங் தன்வாரின் மகன் மெஹர் சிங் தன்வார்(40). அவர் தனது என்.ஆர்.ஐ. நண்பருடன் மும்பை சான்டா க்ரூஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் தங்கியுள்ளார். அவர் பாதுகாவலர்களை அனுப்பும் ஏஜென்சியை அணுகி பெண் பாதுகாவலரை தனது ஹோட்டல் அறைக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
அதற்கு ஏஜென்சிகாரர்கள் பெண் பாதுகாவலரை அனுப்பி வைக்கிறோம். ஆனால் நீங்கள் ஹோட்டலுக்கு வெளியே வந்து அவரை சந்தித்து ஊதியப் பணத்தை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஒரு பெண் மற்றும் அவரது டிரைவர் ஆகியோர் இரவு 1 மணிக்கு ஹோட்டலுக்கு வந்து மெஹர் மற்றும் அவரது நண்பரை ஹோட்டலில் இருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் வெளியே வந்தவுடன் அவர்களின் வயிற்றில் கத்தியை வைத்து ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம், பணத்தை கொள்ளையடித்துவிட்டு அவர்கள் காரில் தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் பற்றி மெஹர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications