அமைச்சர் பதவிக்குக்கும், நல்ல போஸ்டுக்கும் பாஜக எம்பிக்கள் போட்டா போட்டி
டெல்லி: மத்திய அமைச்சர் பதவியை பிடிக்க பாஜக எம்.பிக்கள் டெல்லியில் குவிந்து லாபி நடத்தி வருகிறார்கள்.
நரேந்திர மோடியையும், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கையும், ஆர்எஸ்எஸ் தலைவர்களையும் அடுத்தடுத்து சந்தித்து தங்களை அமைச்சரவையில் சேர்ப்பதால் விளையும் லாப கணக்குகளை பட்டியலிட்டு வருகின்றனர்.
கூட்டணிக் கட்சிகளுக்கும்..
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்துவிட்டது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அமைச்சர் பதவியை கூட்டணிக் கட்சிகளுக்கும் அளிக்கும் விருப்பம் பாஜக இருப்பதாகவே தெரிகிறது.
அவஸ்தை இல்லை...
கூட்டணி கட்சி ஆட்சி என்றால், அமைச்சர் பதவிக்காக கூட்டணி கட்சிகள் கடுமையான நெருக்கடியை கொடுக்கும். எங்கள் கட்சி எம்.பிக்களுக்கு இந்த இந்த துறைகள்தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும். பிரதமரும், கூட்டணியின் தலைமை கட்சி தலைவரும் தலையை பிய்த்துக் கொள்வார்கள். அதிருஷ்டவசமாக அந்த அவஸ்தை நரேந்திர மோடிக்கும், ராஜ்நாத் சிங்கிற்கும் ஏற்படவில்லை.
இது தான் சார் என் பயோடேட்டா....
ஆனால் பாஜக கட்சி எம்.பிக்கள் அமைச்சர் பதவிக்காக கடுமையாக லாபி செய்து வருகிறார்கள். டெல்லியிலுள்ள குஜராத் பவனில் மோடி தங்கியுள்ள இடத்துக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சீனியர் எம்.பிக்கள் படையெடுத்து சென்று அமைச்சர் பதவி கேட்டு, லாபி நடத்துகிறார்கள்.
இதேபோல ராஜ்நாத் சிங் இல்லத்துக்கும் படையெடுக்கிறார்கள். தாங்கள் பெற்ற தேர்தல் வெற்றி எண்ணிக்கை, இந்த தேர்தலில் வாங்கிய வாக்கு வித்தியாசம், முந்தைய அனுபவம் போன்றவற்றையெல்லாம் முன்வைத்து அமைச்சர் பதவி அளிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறுகிறார்கள்.
சார் நம்ம ஜாதிக்காரங்க எதிர்பார்க்குறாங்க...
சில எம்.பிக்கள் தங்கள் ஜாதியை சுட்டிக்காட்டி, அமைச்சர் பதவி அளிக்குமாறு கேட்கிறார்கள். சிலர் மாநில வாரியாக முன்னுரிமை கொடுக்குமாறு வலியுறுத்தி பதவி கேட்கிறார்கள். இதி்ல மூத்த தலைவர்களும் விதிவிலக்கு இல்லை.
நல்ல போஸ்டா குடுங்க..
என்ன வித்தியாசம் என்றால் மூத்த தலைவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது தெரிந்திருந்தாலும், நல்ல துறைகளை பெற வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு. சுஷ்மாசுவராஜ், உமாபாரதி, கோபிநாத் முண்டே ஆகியோர் நேற்று தங்களுக்கு ஒதுக்க வேண்டிய துறை குறித்து ராஜ்நாத்சிங்கிடமும், மோடியிடமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.