உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக மாட்டார் - அமித் ஷா உறுதி
கோரக்பூர் குழந்தைகள் இறப்புக்கு பொறுப்பேற்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பெங்களூரு: கோரக்பூர் மருத்துவமனையில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணமடைந்ததற்கு பொறுப்பேற்று உத்தரபிரதேச முதல்வர் பதவியை யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய மாட்டார் என பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இதுவரை 72 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தக் குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பெங்களூருவில் ஒரு கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, குழந்தைகளின் இறப்புக்கு தார்மீக பொறுப்பேற்று யோகி ஆதியநாத் பதவி விலக மாட்டார் என்று கூறியுள்ளார்.
பதவி விலக வேண்டும் என்று கேட்பது காங்கிரஸ் கட்சி. அதுமட்டுமில்லாமல் கோரக்பூரில் இது முதன்முறையாக நடக்கும் சம்பவம் அல்ல என கூறியுள்ளார்.