எங்களால் தேசியக் கொடிக்கு ஆபத்தல்ல.. அதை இறக்க நினைப்பவர்களுக்கே ஆபத்து.. மெகபூபாவுக்கு பாஜக பதிலடி
ஸ்ரீநகர்: "பாஜகவால் இந்திய தேசியக் கொடிக்கு ஆபத்து அல்ல; அந்தக் கொடியை இறக்க நினைப்பவர்களுக்குதான் ஆபத்து" என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அல்டாப் தாக்குர் தெரிவித்தார்.
இந்திய அரசியல் சாசனத்தை பாஜக அழிக்கிறது என்றும், நமது தேசியக் கொடியை கூட பாஜக மாற்றிவிடும் எனவும் மெகபூபா முப்தி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அல்டாப் தாக்குர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், காஷ்மீரில் நமது மூவர்ணக் கொடியை ஏற்றவே கூடாது என கங்கனம் கட்டிக் கொண்டிருந்த மெகபூபா முப்திக்கு திடீரென தேசியக் கொடி மீது எப்படி அக்கறை வந்தது? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இப்படியே போனால்.. தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடி தான் பறக்குமாம்.. பாஜக மீது மெகபூபா ‛அட்டாக்’
பாஜகவை கடுமையாக சாடிய மெகபூபா
ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் பேசியதாவது: இந்திய மக்களின் தயவால் மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக, இன்று அதே மக்களை தங்கள் காலில் போட்டு நசுக்கி வருகிறது. மத்திய அரசு என்ன செய்தாலும் மக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். அடக்குமுறையை தங்கள் ஆயுதமாக பாஜக கையாண்டு வருகிறது. சர்வாதிகாரத்தால் மக்கள் வெகுநாட்களுக்கு அடக்கி வைக்க முடியாது. அந்த வகையில், பாஜகவின் சர்வாதிகாரமும் விரைவில் முடிவுக்கு வரும்.
"தேசியக் கொடியையே மாற்றிவிடும்"
மத்திய பாஜக அரசு தங்களுக்கு ஏற்றவாறு இந்திய அரசியல் சாசனத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறது. காஷ்மீர் அரசியல் சாசனத்தை முற்றிலுமாக அழித்தது போல, இந்திய அரசியல் சாசனத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இன்னும் சிறிது விட்டால் கூட, நம் முன்னோர்கள் ரத்தம் சிந்தி ஏற்றிய நம் தேசியக் கொடியை தூக்கியெறிந்துவிட்டு, அக்கட்சியின் கொடியான காவிக்கொடியை பறக்கவிட்டு விடும் என மெகபூபா முப்தி பேசினார்.
பதிலடி கொடுத்த பாஜக
இந்நிலையில், மெகபூபாவின் இந்த பேச்சு குறித்து ஜம்மு - காஷ்மீர் பாஜக செய்தித் தொடர்பாளர் அல்டாப் தாக்குரிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "இந்திய தேசியக் கொடியை வெறுத்த, காஷ்மீரில் அந்தக் கொடியை பறக்கவிடக் கூடாது என கங்கனம் கட்டி செயல்பட்ட மெகபூபா முப்தியே இன்று நமது கொடியை பற்றி பேச செய்ததே பாஜகவின் வெற்றியாக கருதுகிறேன். இன்று இந்தியாவில் எட்டுத்திக்கும் மூவர்ணக் கொடி பறப்பதை மெகபூபா முப்தியால் பார்க்க முடியவில்லை. அந்த விரக்தியில் அவர் என்னென்னவோ பேசி வருகிறார்"
தேசியக் கொடிக்கு ஆபத்து அல்ல..
இந்திய தேசியக் கொடியை பாஜக மாற்றிவிடும் என மெகபூபா முப்தி கூறியிருக்கிறார். அது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால் அது நடக்காது. பாஜக என்றுமே இந்தியாவை முதன்மையாக கருதும் கட்சி. பிறகுதான் கட்சிக்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். தேசியக் கொடியை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் கட்சி பாஜக. எனவே, பாஜகவால் தேசியக் கொடிக்கு ஆபத்து வராது. அந்தக் கொடியை இறக்க நினைப்பவர்களுக்குதான் பாஜக ஆபத்தை ஏற்படுத்தும்" என்றார்.