பாஜகவில் இணைந்தால் "இதெல்லாம்" தருவதாக ஆசை வார்த்தை.. காங்கிரஸ் பெண் தலைவர் பகீர் தகவல்!
பெலகாவி: பாஜகவில் இணைந்தால் ரூ. 30 கோடி பணத்துடன் அமைச்சர் பதவி கிடைக்கும் என கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவி லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய கட்சிகள் இணைந்து கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நடத்துகின்றன.
கடந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடித்த போதிலும் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. இதனால் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மஜத மற்றும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரூ. 30 கோடி
இதுகுறித்து பெலகாவி (ஊரகம்) எம்எல்ஏ லட்சுமி ஹெப்பால்கர் கூறுகையில், பாஜக பெண் தலைவர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் பாஜகவில் இணைந்தால் ரூ.30 கோடி பணமும் அமைச்சர் பதவியும் தருவதாக தெரிவித்தார்.
[போலீஸ் என்று கூறி பேருந்து நிலையத்தில் பிச்சைக்காரரை கண்மூடித்தனமாக அடித்த அதிமுக நிர்வாகி!]

ஆஃபர்கள்
எனினும் நான் மறுத்துவிட்டேன். நான் காங்கிரஸ் கட்சியின் தீவிரமாக பணியாற்றியவள், எத்தனை ஆஃபர்கள் கொடுத்தாலும் அது எனக்கு வேண்டாம். இதையடுத்து அந்த நபர்கள் என் தங்கையையும் மற்ற எனது குடும்ப உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு என்னை சமானதானப்படுத்தி இந்த ஆஃபர்களை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

நட்சத்திர ஹோட்டல்
இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வராவிடம் புகார் கொடுத்துள்ளேன். இந்த சம்பவம் மே மாதம் நடந்தது. அதாவது பாஜகவினரிடம் விலை போகாமல் இருப்பதற்காக அனைத்து எம்எல்ஏக்களையும் காங்கிரஸ் கட்சி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்த போது நடந்தது என்றார்.

கருத்தையும் தெரிவிக்கவில்லை
கடந்த மே மாதம், அதாவது 4 மாதங்களுக்கு முன்பு நடந்த விவகாரத்தை இத்தனை நாட்கள் மௌனமாக இருந்துவிட்டு லட்சுமி தற்போது ஏன் கூறுகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து இதுவரை அவர் பொது இடத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

மாநில அரசியல்
ஜர்கிஹோலி சகோதரர்களுக்கு இடையே அண்மையில் நடந்த மோதலின்போது லட்சுமி ஹெப்பார்கர் ஓரங்கட்டப்பட்டார். தற்போது பாஜக கொடுப்பதாக சொன்ன ஆஃபர்களை கூறியதன் மூலம் மாநில அரசியலை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டதாகவே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications