17ம் தேதி பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம்: மோடியே அடுத்த பிரதமர்- ராஜ்நாத் சிங்
அகமதாபாத்: பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்காரி ஆகியோர் புதன்கிழமை டெல்லியில் இருந்து குஜராத் சென்றனர். அவர்கள் காந்திநகரில் பாஜக பிரதமர் வேட்பாளரான மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அப்போது வரும் 17ம் தேதி பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு என்ன பொறுப்பு வழங்கலாம் என்பது பற்றியும் ஆலோசித்துள்ளனர்.
கூட்டத்திற்கு பிறகு ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
17ம் தேதி பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக நாடாளுமன்ற குழு தலைவராக மோடியை எப்பொழுது தேர்வு செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
பாஜகவுக்கு நிச்சயம் பெரும்பான்மை கிடைக்கும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளன. நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.