ஈராக்கில் சிக்கியிருந்த இந்தியர்களை பத்திரமாக மீட்ட மோடி அரசுக்கு பாஜக பாராட்டு
டெல்லி: ஈராக்கில் சிக்கியிருந்த இந்தியர்களைப் பத்திரமாக மீட்டதற்காக மோடி அரசை பாஜக பாராட்டியுள்ளது.
ஈராக் நாட்டில் அரசை எதிர்த்து, ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். இதனால் பணி நிமித்தமாக ஈராக் சென்றுள்ள இந்தியர்கள் பலர் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர். அவர்களைப் பத்திரமாக மீட்கும் முயற்சியில் தொடர்ந்து மத்திய அரசு ஈடுபட்டு வந்தது.

இதற்கிடையில், மறைந்த முன்னாள் அதிபர் சதாம் உசைனின் சொந்த ஊரான திக்ரித் நகரில் பணியாற்றிய 46 இந்திய நர்சுகளை தீவிரவாதிகள் கடந்த வியாழனன்று தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகருக்கு கடத்திச் சென்றனர்.
இதனால் இந்திய நர்சுகளின் உயிருக்கு ஆபத்து உண்டாகலாம் என்ற அச்சம் நிலவியது. அதனைத் தொடர்ந்து அந்த நர்சுகளை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் இந்திய வெளியுறவுத் துறை ஈடுபட்டது.
மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக இந்திய நர்சுகள் 46 பேரையும் ஐ,எஸ்.ஐ.எஸ்.ஐ விடுதலை செய்தது. நேற்று அவர்கள் தனி விமானம் மூலம் பத்திரமாக தாயகம் திரும்பினர். இந்த விமானத்தில் நர்சுகள் தவிர மேலும் 137 இந்தியர்களும் ஈராக்கில் இருந்து இந்தியா வந்து சேர்ந்தனர்.
இதற்காக நரேந்திரமோடி தலைமையிலான அரசை, பாரதீய ஜனதா கட்சியின் பத்திரிகை தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா பாராட்டி உள்ளார். வெளியுறவுத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து மேலும் அங்கு தவிக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் திரும்ப உதவி செய்யும் என்று நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications