'வளர்ச்சிக்கு முக்கியத்துவம்' .... பீகார் சட்டசபை தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க உறுதி
பாட்னா: பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்று பாரதிய ஜனதா கட்சி தமது தேர்தல் அறிக்கையான தொலைநோக்கு ஆவணத்தில் உறுதி அளித்துள்ளது.
பீகாரில் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 8-ந் தேதி எண்ணப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறது பா.ஜ.க.. அக்கட்சியில் தேர்தலில் போட்டியிட பலருக்கும் வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தி வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த உட்கட்சி மோதலை சமாளிப்பதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா பீகாரில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இன்று வெளியிட்டார்.
பீகாரின் வளர்ச்சியை இலக்காக கொண்டு இந்த தொலைநோக்கு ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. பீகாரில் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்; ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தால் நிலையான நிர்வாகத்தை வழங்க முடியவில்லை. பீகாரை ஆண்ட 40 ஆண்டுகால காங்கிரஸ், 15 ஆண்டுகால ஆர்.ஜே.டி (ராஷ்டிரிய ஜனதா தளம்), 10 ஆண்டுகளாக ஜேடியூ (ஐக்கிய ஜனதா தளம்) அரசுகளால் பீகார் வளர்ச்சி அடையவே இல்லை. இந்த நிலைமையை முற்றாக மாற்றுவோம் என்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பீகாருக்கான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் மத்திய அரசு அளிக்கும். எங்களுக்கு பெரும்பான்மை கிடைத்தால் இந்த தொலைநோக்கு ஆவணத்தில் உறுதி அளித்துள்ள வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களை நிறைவேற்றுவோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,












Click it and Unblock the Notifications