சத்தீஸ்கர் பாஜக ஆட்சி படுமோசம்: சோனியா கடும் தாக்கு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் மிகவும் பின் தங்கிய நிலையில் வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு ஆளும் பாரதிய ஜனதா அரசுதான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சாடியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 2வது கட்டமாக எஞ்சிய 72 தொகுதிகளுக்கு வரும் 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
2-ம் கட்ட தேர்தலையொட்டி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் சோனியா காந்தி இன்று பங்கேற்று பேசியதாவது:

பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் வளர்ச்சி சீர்குலைந்து போய்விட்டது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
ஆனால் சத்தீஸ்கர் அரசு அதனை பயன்படுத்தவில்லை. வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு போன்றவற்றில் பாஜக அரசு கவனத்தில் கொள்ளவில்லை. இம்மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. கல்வி கட்டமைப்பில் கவனம் செலுத்தவில்லை.
சத்தீஸ்கர் கிராமப்புறங்களில் மின்சாரம் இல்லை.. சாலை வசதி இல்லை.. மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டின் பயனை அனுபவிக்க வேண்டியது மாநில மக்கள். ஆனால் சத்தீஸ்கர் மாநில அரசால் மக்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. மாவோயிஸ்டுகளை ஒடுக்கவும் சத்தீஸ்கர் அரசு தவறிவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications