மோடியை எதிர்த்தால் பாகிஸ்தானுக்கு ஓடனும்னு சொன்ன கிரிராஜ்சிங்குக்கு தேர்தல் ஆணையம் தடை!
டெல்லி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்தால் பாகிஸ்தானுக்குத்தான் ஓட வேண்டும் என்று சொன்ன பாஜக மூத்த தலைவர் கிரிராஜ்சிங் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
பீகார் மாநில முன்னாள் அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான கிரிராஜ்சிங் அண்மையில் ஜார்க்கண்ட் மாநில பிரசாரத்தின் போது பேசுகையில், பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து பேசுபவர்கள் பாகிஸ்தானுக்குப் போக வேண்டியதுதான். அவர்களுக்கு இந்தியாவில் இனி இடம் கிடையாது என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதாவும் கூட கிரிராஜ்சிங்கை விமர்சித்து வந்தது. இந்த நிலையில் கிரிராஜ்சிங் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் தேர்தல் ஆணையத்திடமும் புகார் கொடுக்கப்பட்டது.
இதை ஆராய்ந்த தேர்தல் ஆணையம், கிரிராஜ் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்துள்ளது.