அசாம்-ஐ கைப்பற்ற 'பாக்கா ஸ்கெட்ச்' போட்ட BJP.. 3வது முறையாக ஆட்சி வந்தது எப்படி?
அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கும் நிலையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணையதள தகவலின்படி, பாஜக 126 தொகுதிகளில் 82 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. இது அசாம் வரலாற்றில் பாஜகவின் அதிகப்பட்ச இடங்களை வென்ற தேர்தலாக மாறியுள்ளது.
அதன் கூட்டணிக் கட்சிகளான போடோலாந்த் பீப்புள்ஸ் ஃப்ரண்ட் (பிபிஎஃப்) மற்றும் அசோம் கண பரிஷத் (ஏஜிபி) ஆகியவை தலா 10 இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகள் அசாம் அரசியலில் பாஜகவின் ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.

2021 சட்டமன்றத் தேர்தலில் 29 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, இந்த முறை மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போது காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இதில் 18 இடங்கள் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகளாகும். வடக்கு அசாம், அப்பர் அசாம் உள்ளிட்ட இந்து பெரும்பான்மை பகுதிகளில் காங்கிரஸ் கிட்டத்தட்ட முழுமையாகத் தோற்றுள்ளது.
இந்து வாக்குகளின் ஒருங்கிணைப்பு
பாஜகவின் இந்த பெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக இந்து வாக்குகளின் பெரும் ஒருங்கிணைப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என ஸ்க்ரோல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்சுள்ளது. திப்ருகர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றும் கௌஸ்துப் தேகா கூறுகையில், "பாஜக தன்னை இந்துக்களின் பாதுகாவலராகக் காட்டியதும், இந்து அடையாளத்தை அசாமிய அடையாளத்துடன் இணைத்துப் பேசியதும் வாக்குகளை ஒன்றிணைக்க உதவியது" என கூறினார்.
2016-ல் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக, 'ஜாதி, மட்டி, பேத்தி' (சமூகம், நிலம், வீடு) ஆகியவற்றைப் பாதுகாக்கும் வாக்குறுதியுடன் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் இந்தக் கொள்கை மேலும் தீவிரமடைந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அசாமிய மக்களிடையே நீண்ட காலமாக இருந்த 'வெளியாட்கள்' பற்றிய பயத்தை பாஜக தனது பிரச்சாரத்தில் பயன்படுத்தியது. அதாவது அசாம் மாநிலத்தை பெங்கால் வம்சாவளி முஸ்லீம் சமூகத்தினரை 'பங்களாதேஷ் சட்டவிரோத குடியேறிகள்' என்று சுட்டிக்காட்டி தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியை 'முஸ்லீம்களுக்காக மட்டுமே செயல்படும் கட்சி' என்றும், அதன் தலைவர் கௌரவ் கோகோயை 'பாகிஸ்தான் ஏஜெண்ட்' என்றும் ஹிமந்தா சர்மா குற்றம் சாட்டினார். இந்தப் பிரச்சாரம் இந்து பெரும்பான்மை உள்ள பகுதிகளில் பாஜகவுக்கு பெரும் ஆதரவைப் பெற்றுத் தந்தது.
நலத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி
பாஜக அரசின் பல்வேறு நலத் திட்டங்களும் இந்த வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. பெண்களுக்கான 'ஒருநோடோய்' திட்டம் உள்ளிட்ட பல்வேறு பண உதவித் திட்டங்கள், மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான நிதி உதவிகள் ஆகியவை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
அசாம் மாநிலத்தில் மக்களின் சிறப்பான போக்குவரத்திற்கு மேம்பட்ட சாலை இணைப்பு வசதி மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த 10 வருடத்தில் கொண்டுவரப்பட்டு உள்ளது.
இந்து வாக்குகளின் ஒருங்கிணைப்பு மற்றும் நலத் திட்டங்கள் ஆகிய இரண்டு முக்கிய காரணங்களும் சேர்ந்து பாஜகவுக்கு அசாமில் மிகப் பெரிய வெற்றியைத் தந்துள்ளன. இந்தத் தேர்தல் முடிவு அசாம் அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம்.












Click it and Unblock the Notifications