பிரதமருக்கு கொஞ்சம் கூட சுயமரியாதை இல்லை... கத்காரி
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையை முட்டாள் என்று பேசுகிறார் ராகுல் காந்தி. பிரதமருக்கு கொஞ்சமாவது சுய மரியாதை இருக்க வேண்டாமா என்று கேட்டுள்ளார் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரி.
டெல்லியில் இன்று நடந்த பாஜகவின் விகாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், நாங்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல, நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிரானவர்கள்.
பொருளாதாராம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. நமது தங்கத்தை அடமானம் வைக்கும் நிலைக்குப் போய் விட்டோம்.
பிரதமரமையும், அவரது கேபினட்டையும் நான்சென்ஸ் என்று கூறுகிறார் ராகுல் காந்தி. தனக்கு சுயமரியாதை இருக்கிறது என்பதை கொஞ்சம் கூட வெளிப்படுத்தாமல் அமைதி காக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். ஏன்...பிரதமர் செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார்.
டெல்லியில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக ஆட்சியமைக்கும். நாட்டில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்றார் கத்காரி.
மோசமான ஊழல் அரசு
பாஜக மூத்த தலைவர் வி.கே.மல்ஹோத்ரா பேசுகையில், இந்திய வரலாற்றிலேயே டெல்லி காங்கிரஸ் அரசும், மத்திய அரசும்தான் மிகவும் மோசமான ஊழல் அரசுகள்.
பகத்சிங்கை பஞ்சாப் மாநிலம் மட்டும்தான் போற்றுகிறது, நினைவு கூறுகிறது. அப்சல் குரு, ஹபீஸ் சயீத் ஆகியோருக்கு கருணை காட்டுகிறது மத்திய காங்கிரஸ் அரசு. ஆனால் பகத்சிங்கை அது வசதியாக மறந்து விடுகிறது. தியாகி என்று கூட கூற அது முன்வரவில்லை என்றார் அவர்.
புதிய சீசன் வந்தாச்சு - சித்து பேச்சு
முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பியுமான நவ்ஜோத் சிங் சித்து பேசுகையில், பழைய இலைகள் உதிர்ந்து விட்டன. புதிய சீசன் வந்து விட்டது. 2014 பொதுத் தேர்தலில் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி அமையும் என்றார். பஞ்சாபி மொழியில் தனது பாணியில் கவிதையாகவும் பேசினார் சித்து.
யாருக்காவது சொர்க்கத்தைப் பார்க்க ஆசை இருக்கிறதா, நேரே குஜராத் செல்லுங்கள்.
காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் பிரண்ட்லி மேட்ச் ஆடிக் கொண்டிருக்கின்றன.
ஆயா வேலை பார்க்கும் ஷீலா தீட்சித் ... விஜய் கோயல் கிண்டல்
இன்னொரு பாஜக தலைவரான விஜய் கோயல் பேசுகையில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஒரு ஆயா போல இருக்கிறார். அப்படித்தான் அவரது வேலைகள் உள்ளன.
குஜராத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. வளர்ச்சி என்றால் என்ன என்பதற்கு புதிய இலக்கணம் வகுத்து குஜராத் பெற்றுள்ள வளர்ச்சியை மட்டம் தட்டப் பார்க்கிறது என்றார் கோயல்.