கார்கேவை ஒதுக்கி வைத்த சோனியா - ராகுல்? தனி இருக்கை வழங்கியதால் ஓரம்கட்டியதாக சர்ச்சை.. பாஜக சாடல்
அகமதாபாத்: காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாடு தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஷோபாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அமர்ந்திருக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மரத்தில் வடிவமைக்கப்பட்ட தனி இருக்கை ஓரமாக வழங்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 84 வது தேசிய மாநாடு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று தொடங்கி உள்ளது. இந்த மாநாடு என்பது இன்றுடன் முடிவு பெற உள்ளது. இந்த மாநாட்டில் பாஜக மக்களுக்கு செய்யும் துரோகம், பாஜக அரசின் குறைபாடுகளை மக்களிடம் எடுத்து செல்வது பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது பற்றியும் தீவிரமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கேசி வேணுகோபால் உள்பட பல மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, தேர்தல் முறைகேடு, தற்போது நடக்கும் வர்த்தக போர் உள்ளிட்டவை நம் நாட்டை எப்படி பாதிக்கிறது என்று விளக்கினார்.
குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தால் தான் பாஜக வெல்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து தான் பாஜக வெல்கிறது. இதனால் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறினார். மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு தொடர் தோல்வியால் துவண்டுபோய் உள்ள காங்கிரஸ் இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது என்று பாஜகவினர் சாடியுள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான போட்டோ, வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. பிரார்த்தனை கூட்டம் தொடர்பான மீட்டிங்கில் முதல் வரிசையில் காங்கிரஸ் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். அதில் 2 ஷோபா போடப்பட்டு இருந்தது. அந்த ஷோபாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கேசி வேணுகோபால் உள்பட மொத்தம் 5 பேர் அமர்ந்திருந்தனர். ஷோபாவின் மத்தியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
ஆனால் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஷோபாவில் இடம் அளிக்கப்படவில்லை. மல்லிகார்ஜூன கார்கேவிற்கு தனி இருக்கை வழங்கப்பட்டது. மரக்கட்டையால் செய்யப்பட்ட இருக்கை என்பது வழங்கப்பட்டதோடு, அவர் முன் வரிசையின் ஓரத்தில் அமர வைக்கப்பட்டு இருந்தார். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே உள்ள நிலையில் அவருக்கு எதற்காக ஷோபாவில் இடமளிக்கவில்லை? எதற்காக தனி இருக்கை போடப்பட்டு ஓரத்துக்கு தள்ளப்பட்டார்? என்பது பற்றிய கேள்விகளை பலரும் எழுப்பி வருகின்றனர். சிலர் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளனர்.
குறிப்பாக பாஜகவினர், காங்கிரஸ் கட்சியின் தலைரவாக இருந்தாலும் கூட மல்லிகார்ஜூன கார்கே ஓரம்கட்டப்பட்டுள்ளார். அவர் நடுவில் அமர வைக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியில் முதல் மரியாதை என்பது சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு தான் வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் சாடி வருகின்றனர். இதுதொடர்பாக பாஜகவின் சமூக வலைதள பிரிவின் தேசிய பொறுப்பாளர் அமித் மாளவியாவும் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.
இதுபற்றி அமித் மாளவியா, ‛‛மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தனி இருக்கை வழங்கப்பட்டு இருந்தாலும் கூட அதனை நடுவே தானே கொடுத்திருக்க வேண்டும்? அவர் கட்சியின் தலைவர் என்பதாடு, வயதான நபர்'' என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இந்த வீடியோ இப்போது சர்ச்சையாகி உள்ளது.












Click it and Unblock the Notifications