காலை வாரிய ராஜஸ்தான்.. பாதி ஜெயிக்கவே தண்ணி குடிக்கும் பாஜக! வசுந்தராவை ஓரம் கட்டியதன் விளைவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று 6 மாதங்கள்தான் ஆகிறது. ஆனால், இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதற்கு வசுந்தரா ராஜேவை பாஜக தலைமை ஓரம் கட்டியதே முக்கிய காரணம் என பேசப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் லோக்சபா முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. இம்மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும் 12,13 தொகுதிகள் என 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த முறை ராஜஸ்தானை காங்கிரஸ் தன் வசம் வைத்திருந்தது. ஆனால், ராஜஸ்தான் காங்கிரசில் எழுந்த உட்கட்சி பூசல் காரணமாக தற்போது பாஜக ஆட்சி பிடித்துள்ளது.

புதிய உற்சாகத்துடன் லோக்சபா தேர்தலை எதிர்கொண்ட ராஜஸ்தான் பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் 25க்கு 24 தொகுதிகளையும், கூட்டணியுடன் ஒரு தொகுதியையும் பாஜக வென்றிருந்தது. இந்த முறையும் இதே வெற்றியை பாஜக எதிர்பார்த்திருந்தது. ஆனால், அதற்கு எதிர்மறையாக கடும் அதிருப்திதான் பாஜகவுக்கு கிடைத்தது.
அதாவது 25 தொகுதிகளில் ஜெய்ப்பூரில் பாஜக தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இருப்பினும், தற்போது வரை வெறும் 13 தொகுதிகளில் மட்டுமே கட்சி முன்னிலையில் இருக்கிறது. இது வடமாநிலங்களில் பாஜகவின் வெற்றி வாய்ப்புகளை வெகுவாக குறைத்திருக்கிறது. இந்த பெரும் தோல்விக்கு வசுந்தரா ராஜேவை பாஜக தலைமை ஓரம் கட்டியதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தை கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் ஆட்சி செய்து வந்தார்களோ, அதேபோல ராஜஸ்தானிலும் இரு துருவ அரசியல் நீடித்து வருகிறது. அதில் ஒரு துருவம் காங்கிரஸின் அசோக் கெலாட் எனில் எதிர் துருவம் வசுந்தராதான். அரசு குடும்பத்தை சேர்ந்த இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மத்தியப் பிரதேசமாக இருந்தாலும், திருமணமாகி வந்து ராஜஸ்தானில் செட்டில் ஆகிவிட்டார்.
கடந்த 2003ல் அவர் ராஜஸ்தானில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜஸ்தான் மாநில வரலாற்றில் இது பெரும் திருப்பமாக இருந்தது. காரணம் இம்மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் இவர்தான். ஐந்து முறை எம்.பி. மற்றும் ஆறு முறை எம்.எல்.ஏ.வாக என ராஜஸ்தான் அரசியலை இவர் ஒரு கை பார்த்திருந்தார்.
எனவே கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரை இறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்திருந்தனர். ஆனால், பாஜக தலைமை அதை அப்படியே புறக்கணித்துவிட்டது. வயது 70 ஆகிவிட்டது, இதற்கு பின்னரும் கலகம் செய்து கட்சி தலைமையின் பேச்சை மீறி களத்தில் இறங்க வசுந்தராவும் முயற்சிக்கவில்லை.
எனவே அப்படியே அவர் ஓரம் கட்டப்பட்டார். இந்த லோக்சபா தேர்தலுக்கு மோடி ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். இந்த பிரசார கூட்டத்தில் கூட வசுந்தரா பங்கேற்கவில்லை. அவருக்கு முறையான அழைப்பு இல்லாததால் பங்கேற்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர். தேர்தல் பிரசாரத்தில் அவர் பங்கேற்காதது பெரும் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மறுபுறம் சீனியர் கட்சி தலைவர்களுக்கு சீட் ஒதுக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டது, தற்போதைய முதல்வரின் நிர்வாக குளறுபடிகள் என எல்லாம் சேர்த்து ராஜஸ்தானில் பாஜகவை பலி போட்டிருக்கிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக 59.07% வாக்குகளுடன் 24 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி (ஆர்எல்பி) ஒரு இடத்தையும் வென்றது. ஆனால் இந்த முறை வெறும் 13-14 இடங்களில் பாஜக சுருங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications