100 வார்டுகளை வென்று பெங்களூர் மாநகராட்சியை கைப்பற்றியது பாஜக! காங். படுதோல்வி
பெங்களூர்: பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே, பாஜக முன்னணியிலிருந்தது. இறுதியில் 100 வார்டுகளை வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பிடித்தது. 76 வார்டுகளை மட்டுமே கைப்பற்றி, மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
பெங்களூரு மாநகராட்சியிலுள்ள 198 வார்டுகளில் பொம்மனஹள்ளி பகுதியிலுள்ள, ஹொங்கசந்திரா வார்டில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனால் கடந்த சனிக்கிழமை 197 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் மொத்தம் 49.31 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பெங்களூரு நகரில் உள்ள 27 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்தன.
மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக முன்னிலை பெற்றது. முதலில் பாஜக-காங்கிரஸ் நடுவே ஓரளவுக்கு வித்தியாசம் இருந்த நிலையில், போகப்போக, இந்த வித்தியாசம் அதிகரிக்க தொடங்கியது.
மதியம் 2.30 மணியளவில் முழு வெற்றி நிலவரம் வெளியாகியது. அதன்படி பாஜக 100 வார்டுகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மை பலத்துடன் மாநகராட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 76 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தேவகவுடாவின் மஜதவுக்கு 14 வார்டுகளும், சுயேச்சைகளுக்கு 8 வார்டுகளும் கிடைத்தன.
பெங்களூர் தேர்தல் முடிவுகள், கர்நாடகாவில் ஆளும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு, கிடைத்த அடி பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், காங்கிரசுக்கு ஆதரவாக இருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி வந்துள்ளது. மூன்று கன்னட செய்தி சேனல்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டன. மூன்றிலுமே, காங்கிரஸ் 90 இடங்களையும், பாஜக 75 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, பெங்களூர் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே பெங்களூர் மாநகராட்சியில் பாஜக ஆட்சிதான் நடந்துவரும் நிலையிலும், மக்கள் ஆட்சி மீது அதிருப்தியடையாமல் மீண்டும் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2010 தேர்தல் வெற்றி நிலவரம்:
பெங்களூர் மாநகராட்சிக்கு 2010ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, பாஜக 113 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 64 வார்டுகளிலும், மஜத 14 வார்டுகளிலும் வென்றிருந்தன. பின்னர், மஜத கவுன்சிலர் இறந்ததால் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. எனவே, பாஜக 114 கவுன்சிலர்கள் பலத்துடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.