விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்.. வி.சியையும் இழுத்து.. பாஜகவின் "திடீர்" திட்டம்!
டெல்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தேமுதிகவை எப்படியாவது பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர தீவிரமாக இருப்பதாக தெரிகிறது.
பிரேமலதாவின் நிபந்தனைப்படி விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து அவரது தலைமையில் தமிழக சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க பாஜக முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், தேமுதிக தலைமையில் தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்க பாஜக முயல்வதாகவும், இந்தக் கூட்டணியில், மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை இழுத்து வர முயற்சி நடப்பதாகவும் இன்னொரு தகவலும் கூறுகிறது.
திமுக - தேமுதிக - பாஜக
கிட்டத்தட்ட இலவு காத்த கிளிகளாக மாறிப் போய் விட்டன திமுகவும், பாஜகவும். இருவரையும் செமையாக அலைய விட்டுக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.
ஜவடேகர் என்ட்ரி!
இந்த நிலையில் தமிழக மேலிடப் பொறுப்பாளரான பாஜகவின் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்து விஜயகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்தார். முக்கால் மணி நேரத்திற்கும் மேல் பேசி விட்டு வெளியே வந்த அவர் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படப் போவதாகவும் கூட்டணி குறித்து பேசியதாகவும் கூறினார்.
அதெல்லாம் பேசலையே
ஆனால் ஜவடேகர் விஜயகாந்த்தைப் பேசி விட்டு பாஜக அலுவலகத்திற்குத் திரும்புவதற்குள்ளாகவே நாங்கள் கூட்டணி குறித்துப் பேசவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தேமுதிக அறிக்கை விட்டு ஜவடேகருக்கு ஷாக் கொடுத்தது.
திமுகவுடன் கூட்டணியா
மறுபக்கம், திமுகவுடனும் மாறி மாறி பேசி வந்தது தேமுதிக தரப்பு. எல்லாமே ரகசியமாகத்தான். எதையும் அதிகாரப்பூர்வமாக யாரும் செய்யவில்லை. இந்த நிலையில் திடீரென திமுகவுடன் தேமுதிக கூட்டணி உறுதியானதாகவும், தேமுதிகவுக்கு 59 தொகுதிகள் என்றும் செய்திகள் வெளியாகின.
இல்லை
ஆனால் அந்த செய்தி வதந்தி, தவறானது என்று தேமுதிக மறுத்து விட்டது. இதனால் திமுக தரப்பு ஜெர்க் ஆனது. பாஜக தரப்புக்கோ பளீரென பல்பு எரிந்தது.
ஜவடேகருக்கு ரெய்டு
இந்த நிலையில்தான் ஜவடேகர் 2வது முறையாக சென்னைக்கு வந்தார். ஏதோ ஜேம்ஸ்பாண்ட் போல, ரகசியமாக சென்னைக்கு வந்த அவர் தனது கட்சித் தலைவர்களுக்குக் கூட தெரிவிக்காமல் விஜயகாந்த்தைச் சந்திக்க முயன்றார். அவரும் அலைய விட்டு மீனம்பாக்கம் பக்கமாக வாங்க பாத்துக்கலாம் என்று அழைத்துப் பேசினார்.
பாஜகவிற்கு வந்த சோதனை
இப்படி ஜவடேகர் ரகசியமாக செயல்பட்டது தமிழக பாஜக தலைவர்களை டென்ஷனாக்கி விட்டது. அவரால் கட்சிப் பெயர் கெட்டு விட்டதாக தமிழக தலைவர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
விடாமல் விரட்டும் ஜவடேகர்
ஜவடேகரின் இந்தப் போக்கு குறித்து அமித் ஷாவிடம் புகார் தரவும் தமிழக பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழக கூட்டணி விவகாரத்தை கெளரவப் பிரச்சினையாக ஜவடேகர் எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லியிலிருந்து பேச்சு
அதன் ஒரு பகுதியாக, டெல்லியில் இருந்தபடி தேமுதிக தரப்புடன் அவர் தொடர்ந்து பேசி வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் அவர் தொடர்ந்து பேசி வருகிறாராம்.
முறியவில்லை
இதுதொடர்பாக ஜவடேகர் கூறியதாக வந்துள்ள ஒரு செய்தியில், பாஜக - தேமுதிக உடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை.
விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்
விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக விரும்புகிறது. பிரேமலதா விஜயகாந்த் நேற்று என்னுடன் தொலைபேசியில் கூட்டணி குறித்து பேசினார் என்று ஜவடேகர் கூறியதாக அந்த செய்தி கூறுகிறது.
மறுபக்கம் புதிய முயற்சி
மறுபக்கம் இன்னொரு முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாம். அதாவது திமுக, அதிமுக ஆகியவற்றுக்குக் கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில் விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவதே அந்த முயற்சியாம்.
விஜயகாந்த் தலைமையில்
விஜயகாந்த் தலைமையிலான அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் இருப்பாராம். அதில் தேமுதிக, பாஜக, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன், விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்க்க முடிவு செய்துள்ளனராம்.
மக்கள் நலக் கூட்டணியை உடைத்து
இதற்காக மக்கள் நலக் கூட்டணியை உடைத்து விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் இழுத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். இந்த முயற்சிக்கு விஜயகாந்த் சம்மதித்து விட்டதாகவும் இந்த புதிய செய்தி கூறுகிறது.
டெல்லியில் தேமுதிக குழு?
இதுதொடர்பாக ஆலோசனை நடத்த தேமுதிகவிலிருந்து ஒரு குழு டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பேச்சுக்கள் ரகசியமாக நடந்து வருகிறதாம். இக்குழுவினர் ஏற்கனவே ஒரு சுற்று ஜவடேகர், பியூஸ் கோயல் ஆகியோரைச் சந்தித்து விட்டனராம். அடுத்து அமித் ஷாவை சந்திக்கப் போகிறார்களாம்.
நாளைக்கு என்ன செய்தியோ!