மத்தியில் நல்லாட்சியை பாஜக வழங்கும்: அத்வானி! மோடிக்கு புகழாரம்!!
போபால்: மாநிலங்களில் நல்லாட்சி வழங்குவதைப் போல மத்தியில் நிலையான நல்லாட்சியை பாரதிய ஜனதா வழங்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற பாரதிய ஜனதா கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான், உமாபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து அவரை பிரதமர் வேட்பாளராக அத்வானி அறிமுகப்படுத்தினார். அப்போது கூட்டம் மோடியின் பெயரை உச்சரித்து ஆர்ப்பரித்தது. பின்னர் மோடி, அத்வானி காலை தொட்டு ஆசி பெற்றார். ஆனால் அத்வானியோ வேறொரு பக்கம் திரும்பி வணக்கம் செலுத்தியது மோடி அதிருப்தியாளர்களை திகைக்க வைத்தது.
இதைத் தொடர்ந்து பேசிய அத்வானி, இதுதான் உண்மையான மகா கும்பமேளா.. இந்த உலகில் இப்படி ஒரு ஆதரவாளர்கள் கூட்டத்தை எங்கும் கண்டிருக்க முடியாது.
மோடி ஜி நமது தேசத்தின் அடையாளம் மட்டுமல்ல.. உலகின் அடையாளமும் கூட.
மாநிலங்களில் பாரதிய ஜனதா நல்லாட்சியை வழங்கியது. குஜராத்தில் நரேந்திர மோடி நல்லாட்சி நடத்துகிறார். அவரால் 24 மணி நேரமும் அந்த மாநிலத்தில் மின்சாரத்தை வழங்க முடிந்துள்ளது.
மத்திய பிரதேசத்திலும் நல்லாட்சி கொடுத்துள்ளோம். அதேபோல் மத்தியிலும் நல்லாட்சியை நிலையான ஆட்சியை பாரதிய ஜனதா வழங்கும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய உமாபாரதியும் அத்வானியையும் நரேந்திர மோடியையும் புகழ்ந்தார்