கை கொடுக்க வந்தா கோபால் கந்தா.. கண்டுகொள்ளாது பாஜக.. ரவி சங்கர் பிரசாத் உறுதி
சண்டிகர்: ஹரியானாவில் அரசு அமைப்பதற்கு, சர்ச்சைக்குரிய எம்.எல்.ஏ கோபால் கந்தாவின் ஆதரவை பாஜக கோராது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெளிவுபடுத்தியுள்ளார்.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு, குறைந்தபட்ச பெரும்பான்மையை நிரூபிக்க, 46 எம்எல்ஏக்கள் தேவை.

ஹரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவால் மொத்தமுள்ள 40 தொகுதிகளில்தான் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. புதிதாக உருவான, ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வென்று அசத்தியது. அதேபோல் சுயேட்சைகள் 7 இடங்களில் வென்றனர். எனவே, ஹரியானாவில் ஆட்சி அமைக்க இழுபறி நிலை நீடித்தது.
சுயேச்சைகள் ஆதரவோடு ஆட்சியமைக்க பாஜக முதலில் முடிவெடுத்தது. ஆனால், சுயேச்சைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹரியானா லோகித் என்ற கட்சியின் தலைவரும், இந்த தேர்தலில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான, கோபால் கந்தா, தனக்கு அமைச்சர் பதவி தந்தால், சுயேச்சைகளை பாஜகவுக்கு ஆதரவு அளிக்கச் செய்வதாக கூறினார்.
ஆனால் கோபால் கந்தா, ஏற்கனவே விமான பணிப்பெண் மற்றும், அவர் தாயார் மரண விவகாரத்தில் தொடர்புள்ளவர் என்று குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பதால், அவரது ஆதரவை ஏற்க கூடாது என்று பாஜகவில் எதிர்ப்பு குரல் எழுந்தது. மூத்த தலைவர் உமா பாரதி இதை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில்தான், ஜனநாயக் ஜனதா கட்சியுடன் நேற்று இரவு பாஜக கூட்டணி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. நாளை பிற்பகலில், பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், "கந்தாவின் ஆதரவை பாஜக பெறப் போவதில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று ரவிசங்கர் பிரசாத் இன்று சண்டிகரில் செய்தியாளர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications