குஜராத்தில் 5 வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் பாஜக - அதிர வைக்கும் எக்ஸிட் போல் முடிவுகள்
குஜராத் மாநிலத்தில் 5 வது முறையாக பாஜக ஆட்சியை தக்க வைக்க உள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Recommended Video
காந்தி நகர்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவடைந்துள்ளது. குஜராத்தில் இம்முறையும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று இதுவரை வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
குஜராத் சட்டசபையின் 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9ஆம்தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது. டிசம்பர் 18ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.
நங்கூரமிட்ட பாஜக
குஜராத்தில் 1998ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கேசுபாய் படேல் முதல்வராக பதவி வகித்தார். 2001 ஆம் ஆண்டு கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து முதல்வராக பொறுப்பேற்றார் மோடி.
முதல்வர் டூ பிரதமர்
குஜராத்தில் அவர் மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மக்களை கவரவே தொடர்ந்து 2002, 2007, 2012 ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் பாஜகவே ஆட்சியை தக்கவைத்தது. குஜராத் முதல்வராக 4 முறை பதவி வகித்த மோடி தற்போது பிரதமராக உள்ளார். எனவே குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் முழு முனைப்போடு பிரசாரம் செய்தது பாஜக.
வீட்டுக்கு அனுப்ப திட்டம்
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி முழு முனைப்போடு களத்தில் இறங்கியது. ராகுல்காந்தி தலைமையில் முழு வீச்சில் பிரசாரம் செய்தனர். பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கனவாகும். ஆனால் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கூறியுள்ளன.
பாஜகவுக்கே வெற்றி
பாஜக 109 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் மீண்டும் பாஜக
சஹாரா டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. இந்த கருத்து கணிப்பின் படி குஜராத்தில் 110 முதல் 120 இடங்களில் பாஜக வெல்லும். அதேபோல் காங்கிரஸ் 65 முதல் 75 இடங்களைக் கைபற்றும் என்று தெரிவித்து இருக்கிறது.
ஆட்சியை தக்கவைக்கும் பாஜக
நியூஸ் எக்ஸ்-சிஎன்எக்ஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி குஜராத்தில் பாஜக 115 இடங்களை அள்ளும் என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குஜராத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களை கைப்பற்றும் என்றும் இதரகட்சிகள் 2 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாஜகவிற்கு 108, காங்கிரஸ் 74
ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளில் குஜராத்தில் பாஜக 108 இடங்களை வென்று ஆட்சியமைக்கும் என்றும் காங்கிரஸ் 74 இடங்களில் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. குஜராத்தில் பாஜக ஆட்சியமைத்தாலும் 2012 தேர்தலை ஒப்பிடும் போது 2017 தேர்தலில் அந்த கட்சியின் வாக்கு வங்கியானது 47.8 சதவீதத்தில் இருந்து 47.4 சதவீதமாக குறைந்துள்ளது.
குஜராத்தில் மலரும் தாமரை
இதே போல டிவி 9 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 108 இடங்களைக் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் கட்சி 74 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று வெளியாகியுள்ளது. அதே போல இந்தியா டுடேயின் கருத்துக்கணிப்பில் பாஜகவிற்கு 99 முதல் 113 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சி 68 முதல் 82 இடங்களில் வெல்லும் என்றும் கணித்துள்ளது.
அசைக்க முடியாத பாஜக
குஜராத்தில் பாஜக வெற்றி பெறுவதன் மூலம் 5வது முறையாக ஆட்சியை கைப்பற்றுகிறது. கடந்த காலங்களைப் போல அல்லாமல் இம்முறை பெறும் போட்டிகளுக்கு மத்தியில் தேர்தல் களத்தில் பாஜக களமிறங்கியது. பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கவுரவப் பிரச்சினையாகவே கருதப்படுகிறது. கடந்த 2007 தேர்தலில் 117 சீட்டுகளிலும், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 116 தொகுதிகளையும் பாஜக வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.