இங்கிட்டு நாடாளுமன்றமே கொந்தளிக்க... அங்கிட்டு பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானுக்கு சவால்விட்ட மோடி!
கருப்பு பண விவகாரத்தில் நாடாளுமன்றம் கொந்தளித்து கொண்டிருக்க மோடி பஞ்சாப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன.. இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் பஞ்சாப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி சவால்விட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடைபெற வேண்டும்; பிரதமர் மோடியும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது எதிர்க்கட்சி எம்பிக்களின் கோரிக்கை. ஆனால் பிரதமர் மோடி சபைகளுக்கு எட்டிப் பார்த்துவிட்டு விவாதங்களில் பங்கேற்காமல் சென்றுவிடுகிறார்.
அத்துடன் ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை சகட்டுமேனிக்கு சாடியும் வருகிறார். இது நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இன்று கடுமையாக எதிரொலித்தது. ரூபாய் நோட்டு தொடர்பான விவாதங்களில் பங்கேற்க பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வரவேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் முடங்கிப் போயின.
இதுஒருபுறம் நடந்து கொண்டிருக்க பஞ்சாப் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
கருப்பு பணமும் ஊழலும் இந்த நாட்டின் நடுத்தர மக்களை படுபயங்கரமாக சூறையாடிவிட்டது. நடுத்தர மக்களின் உரிமைகளை பறித்துவிட்டது. அந்த பறிபோன உரிமைகளை மக்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்.
ஊழலும் கொள்ளையும்தான் உண்மையான தீவிரவாதம். கருப்பு பணத்துக்கு எதிரான போரில் மக்கள் எனக்கு ஆதரவு தர வேண்டும். இத்தனை கடினமான சூழலிலும் எனக்கு ஆதரவு தரும் மக்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
இங்கே இருந்து பாகிஸ்தான் கூப்பிடு தொலைவில்தான் உள்ளது. அந்த நாட்டின் பெஷாவரில் பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது இந்தியாவே சோகத்தில் மூழ்கியது.
பாகிஸ்தானிய மக்கள்தான் அந்த நாட்டு அரசிடம் ஊழலுக்கு எதிராக, கள்ள நோட்டுக்கு எதிராக போராடுமாறு வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.