அம்மாடியோவ்... கடந்தாண்டு மட்டும் ரூ.1 லட்சம் கோடி கறுப்பு பணம் இந்தியாவில் கண்டுபிடிப்பு!
டெல்லி: கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனைகளில் சுமார் ரூ 1 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
வருமான வரித் துறையில் கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணத்தை திடீர் சோதனைகள் மூலம் வருமான வரித்துறையினர் கண்டு பிடிப்பது வழக்கம்.
அந்தவகையில், கடந்த 2013-14 நிதி ஆண்டில், வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டைகளில் ரூ 1 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்ட விரோதப் பணம்....
பல்வேறு தனி நபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் நடத்திய ஆய்வுகளில் கணக்கில் காட்டப்படாத சட்ட விரோதப்பணம் ரூ. ரூ.90 ஆயிரத்து 390 கோடியே 71 லட்சம் கைப்பற்றப் பட்டுள்ளது.
கறுப்புப் பணம்...
இது தவிர வேறு பல இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ரூ 10 ஆயிரத்து 791 கோடியே 63 லட்சம் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மொத்தப்பணம்..
ஆக ஒரே நிதி ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் ரூ.1 லட்சத்து ஓராயிரத்து 182 கோடியைத் தொட்டுள்ளது.
இரண்டு மடங்கு...
இது கடந்த நிதியாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணத்தோடு ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு எனக் கூறப்படுகிறது.
நகைகள், ரொக்கங்கள்...
இதே நிதி ஆண்டில், நகைகள், நிலைத்த வைப்புகள், ரொக்கம் போன்றவையும் ரூ.807 கோடி அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.