குடியரசு தின விழாவிற்கு எதிர்ப்பு... மணிப்பூரில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு - யாருக்கும் காயமில்லை!
இம்பால்: நாடு முழுவதும் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடந்து வரும் வேளையில், மணிப்பூரில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்துள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
66வது குடியரசு தின விழாவில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்துள்ளார். இதனால் நாடுமுழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
இந்த சூழலில், குடியரசு தினமான இன்று மணிப்பூரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவைச் சீர்குலைக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஐந்து தினங்களில் மட்டும் எட்டு முறை மணிப்பூரில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.