அஸ்ஸாமில் பாஜக தேர்தல் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு; ஒருவர் பலி: 20 பேர் படுகாயம்
கோல்பாரா: அஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா மாவட்டம் துத்னோய் அருகே அமைக்கப்பட்டுள்ள பாஜக தேர்தல் அலுவலகம் அருகே குண்டுவெடித்தது. இதில் ஒருவர் பலியானார். 20 பேர் படுகாயமடைந்தனர்.
அஸ்ஸாம் சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் துத்னோய் என்ற இடத்தில் தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு தினமும் கட்சி நிர்வாகிகள் கூடி தேர்தல் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இன்று மாலை 7.30 மணியளவில் அந்த அலுவலகத்தில் திடீரென குண்டு வெடித்தது.

இதில், உள்ளே இருந்த கட்சியினர் பலர் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிழந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார்? என்பது தெரியவில்லை. கட்சி அலுவலகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வைக்கப்பட்டு வெடிக்கச் செய்திருப்பதாக ஏடிஜிபி கூறியுள்ளார். 126 தொகுதிகள் கொண்ட அஸ்ஸாம் சட்டசபைக்கு இன்று முதல்கட்டமாக 65 தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்தில் பாஜக தேர்தல் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications