ப்ளூவேல் இணையதள விளையாட்டுக்கு மத்திய அரசு தடை- லிங்குகளை நீக்க உத்தரவு!
ஆபத்தான ப்ளூவேல் இணையதள விளையாட்டை தடை செய்துள்ளது மத்திய அரசு.
டெல்லி : உயிருக்கு உலை வைக்கும் ப்ளூவேல் என்ற ஆன்லைன் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்ததோடு சமூக வலைதளங்கள் அதற்கான லிங்குகள் அனைத்தையும் நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.
தற்போது மாணவர்கள், இளைஞர்கள் உடல்ரீதியிலான விளையாட்டுகளை குறைத்துக் கொண்டு மூளை வேலை கொடுக்கும் விளையாட்டுகளை விளையாட ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு ஆன்லைன் கேம்களையும் விளையாடி வருகின்றனர்.
மாணவர்கள், இளைஞர்களை ப்ளூ வேல் என்ற விளையாட்டு அடிமையாக்கி விட்டது என்றே சொல்லலாம். மிகவும் ஆபத்தான விளையாட்டாக இது உள்ளது. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ப்ளூவேல் என்றால் என்ன?
பேரை கேட்டவுடன் ஏதோ நீல திமிங்கலத்துடன் சண்டையிடுவதோ அல்லது 3டியில் சாகசம் செய்து போல் இருக்கும் என்று நினைத்து விடாதீர். சமூகவலைதளங்களில் விளையாடப்படும் தற்கொலை தொடர்பான ஒரு விளையாட்டாகும்.

50 நாள்கள்
இந்த கேமின் நிர்வாகி ஒருவர் தினந்தோறும் டாஸ்குகளை கொடுப்பார். அதை செய்துவிட்டு அவருக்கு புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். அது போல் தினமும் ஒவ்வொரு டாஸ்க்குகள் வழங்கப்படும்.

என்ன டாஸ்குகள்
இவர்கள் வழங்கும் டாஸ்க்குகள் மிகவும் ஆபத்தானவை. கையில் கத்தியால் கிழித்து கொள்வது, கையில் திமிங்கலத்தை கத்தியால் வரைந்து கொள்வது, யாரும் இல்லாத நேரத்தில் பேய் படம் பார்ப்பது, நடுநிசியில் சுடுகாட்டுக்கு போவது உள்ளிட்ட பணிகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும்.

தற்கொலை
இதையெல்லாம் வெற்றிகரமாக செய்துமுடித்துவிட்டால் 50-ஆவது நாளன்று காரோ, பங்களாவோ அல்லது ஏதேனும் பரிசு பொருளோ கிடைக்காது. மாறாக அந்த போட்டியாளரை தற்கொலை செய்து கொள்ள சவால் விடுவர். இந்த விளையாட்டுக்கு அடிமை ஆகி இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர்.

தடை செய்ய...
உயிர்களுக்கு உலை வைக்கும் இந்த விளையாட்டுக்கு தடை போட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அந்த விளையாட்டுக்கு தடை விதித்தது. இந்த தற்கொலைக்கு சவால் விடும் விளையாட்டை கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் இதற்கான லிங்குகளை நீக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முழுவதும் முடியாது
இந்த விளையாட்டை விளையாட எந்த விதமான செயலிகளும் இல்லாததால் இதை முழுவதும் நீக்க முடியாது. இந்த விளையாட்டு முற்றிலும் சமூக வலைதளங்களில் விளையாடப்படுகிறது. மேலும் போட்டியாளருக்கும், விளையாட்டை அறிமுகப்படுத்துவோருக்கும் இடையே உரையாடலும் சமூக வலைதளங்களிலும், இன்ஸ்டன் மெசேஜிங் செயலிகளிலும் மட்டுமே நடக்கும். ஹேஸ்டேக் மூலம் விளையாடுவதால் அந்த ஹேஸ்டேகையே தடை செய்தால்தான் உண்டு என்கின்றனர் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications