அழகு அந்தமானின் மரண பக்கம்.. முறைகேடான படகு பிசினஸால் பல உயிர்கள் பலியாகும் தொடர் அபாயம்!
போர்ட் பிளேர்: 25 பேர் வரை மட்டுமே ஏற்றக் கூடிய படகில் கூட்டம் அதிகம் இருக்கிறதே என்பதற்காக 45 பேரை படகோட்டி ஏற்றியதால்தான் அந்தமான் கடலில் படகு மூழ்கி பலர் உயிரிழக்கக் காரணமாக அமைந்து விட்டது என்று தெரிய வந்துள்ளது.
இப்படிப்பட்ட படகு விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றபோதிலும், படகுக்காரர்களும் திருந்துவதாக தெரியவில்லை. மக்களும் இன்னும் விழிப்புணர்ச்சி பெற்றதாக தெரியவில்லை. அரசு இயந்திரமும் இதைக் கண்டுகொள்வது போலத் தெரியவில்லை.
இதேபோல அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் சென்று கடலில் மூழ்கிய சம்பவங்கள் சென்னை அருகே மாமல்லபுரத்தில் பலமுறை நடந்துள்ளது. சென்னை அருகே பழவேற்காடு ஏரியிலும் இப்படி ஒரு துயரச் சம்பவம் சில முறை நடந்துள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் சமயத்தில் பெரும் துயர விபத்து நடந்தது. இதையடுத்து இந்த ஆண்டு அங்கு படகு பயணத்திற்கு அரசு தடை விதித்திருந்தது.
இந்த நிலையில்தான் நேற்று அந்தமானில் ஒரு துயரச் சம்பவம் நடந்து விட்டது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பலர் சுற்றுலாக் குழுவாக கடந்த வாரம் அந்தமான் வந்தனர். அங்கு சிறை உள்ளிட்ட பல இடங்களையும் சுற்றிப் பார்த்த அவர்கள் கடைசியாக படகு மூலம் ராஸ் தீவு அல்லது ரோஸ் தீவுக்கு வந்தனர்.
படகு மூலம் இந்தத் தீவுக்கு வந்தனர் பயணிகள். அந்தப் படகில் 25 பேர்தான் பாதுகாப்புடன் பயணிக்க முடியுமாம். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் படகுக்காரர் கூடுதலாக ஏற்றியுள்ளார். அதாவது 45 பேரை ஏற்றியுள்ளார்.
படகு ராஸ் தீவுக்கு பத்திரமாக வந்து விட்டது. ஆனல் நார்த் பே எனப்படும் வடக்கு வளைகுடாவுக்குத் திரும்பும்போது படகு கவிழ்ந்து விட்டது. கடலில் அலைகள் அதிகம் அடித்ததாலும், பாரம் தாங்க முடியாமலும் படகு கவிழ்ந்துள்ளது.
கடலில் விழுந்த சில நிமிடங்களிலேயே 27 பேர் பிணமாக மிதந்தனர். தத்தளித்த 16 பேர் மீட்கப்பட்டனர்.
இதுபோன்ற படகுப் பயணம் அபாயகரமானது, உயிரைப் பறிக்கக் கூடியது என்று தெரிந்தும் அது தொடர்வது வியப்பாக உள்ளது. படகுக்காரர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால், மக்களும் விழிப்புணர்வு வராத நிலையில் இருப்பது வேதனை தருகிறது.
அந்தமானில் எல்லாமே அழகுதான்.. கடல், கடற்கரை, எழில் கொஞ்சும் இயற்கைச் சூழல்.. சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த சிறைச்சாலை.. என எங்கு பார்த்தாலும் அழகு மிளிர எழில் கொஞ்ச காணப்படும் அந்தமானில் இந்த படகு சவாரியால் பேராபத்து பின் தொடர்ந்து காத்திருக்கிறது.
இங்குள்ள படகோட்டிகள், காசை மட்டுமே குறியாக வைத்து அளவுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்று, ராஸ் தீவு, நார்த் பே என பல தீவுகளுக்கும் அழைத்துச் செல்வதைக் காணலாம். ஆடு மாடுகளைப் போல சுற்றுலாப் பயணிகளை இவர்கள் கொண்டு செல்கின்றனர்.
நிச்சயம், சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த உயிர் அபாயம் குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன், படகில் கால் வைக்கும் பயணிகள் யாருக்குமே நீச்சல் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. படகோட்டிகளுக்குத்தான் இதில் அதிக பொறுப்பு உள்ளது. ரிஸ்க் என்று தெரிந்தும் கூட இப்படி அவர்கள் செயல்படுவதற்கு பணமே காரணம்.
பழைய படகுகளை வைத்துக் கொண்டு அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி காசு பார்ப்பதிலேயே அவர்கள் குறியாக உள்ளன. இங்குதான் என்றில்லை, படகு சவாரி உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்திலுமே இந்த அபாயம் நீடித்த கதையாகவே தொடர்கிறது.
இன்று 21 அப்பாவி உயிர்கள் பரிதாபமாக கடலில் கரைந்து போயுள்ளன. இனிமேலாவது இந்த நிலைமையை மாற்ற அரசு உறுதியான நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.