ஏமன் விமானத் தாக்குதலில் சிக்கிப் பலியான 7 இந்தியரில் 6 பேரின் உடல்கள் மீட்பு!
டெல்லி: ஏமனில் சவுதி கூட்டுப்படை நடத்திய விமான தாக்குதலில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 7 இந்தியர்களில் 6 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டில், ஈரான் ஆதரவு பெற்ற ‘கவுதிஸ்' கிளர்ச்சியாளர்கள், அதிபர் அப்த் ரப்பு மன்சூர் ஹதிக்கு எதிராக கடந்த ஆண்டு போரில் ஈடுபட்டனர். தலைநகர் சனா உள்பட பல பகுதிகளை அவர்கள் கைப்பற்றியதைத் டொடர்ந்து, ரியாத் நகருக்கு அதிபர் தப்பிச்சென்றார்.

அதனைத் தொடர்ந்து ஏமன் நாட்டை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையில் வளைகுடா நாடுகள் அடங்கிய கூட்டுப்படை அரசுக்கு ஆதராவாக போரில் இறங்கியது. கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு, பல நகரங்களை ஒவ்வொன்றாக இந்தக் கூட்டுப்படை மீட்டு வருகிறது.
இந்நிலையில், ஏமன் நாட்டின் ஹொடிடா துறைமுகத்தில் எண்ணெய் கடத்தல்காரர்கள் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் சவுதி கூட்டுப்படை தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி இந்தியர்கள் 20 பேர் பலியானதாக முதலில் தகவல்கள் வெளியானது.
கடத்தல்காரர்கள், இரண்டு படகுகளில் வந்து எண்ணெயை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதனை முறியடிப்பதற்காக சவுதி கூட்டுப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட 20 இந்தியர்களில் 13 பேர் உயிருடன் உள்ளதாகவும், மீதமுள்ள 7 பேரை மட்டும் காணவில்லை என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், மாயமான அந்த 7 இந்தியர்களில் 6 பேரின் உடல் கிடைத்திருப்பதாக இன்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காணாமல் போன மற்றொரு நபரைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு விட்டதாகவும், தலைநகர் திஜிபோதியில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications