காணாமல் போன புனே விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த நால்வரில் ஒருவர் சடலம் மீட்பு!
புனே: காணாமல் போன புனே விளம்பர நிறுவன நிர்வாகிகள் 4 பேரில் ஒருவரின் சடலம் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மூவரில் ஆற்றில் மூழ்கியிருக்கின்றனரா என தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.
புனேவை சேர்ந்த விளம்பர நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் பிரணவ் லேலே. அவர் கோவா சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தார். அவருடன் பணியாளர்கள் சிந்தன் பெளச், ஷகில் குரேஷி ஆகியோரும் கோவா செல்ல முடிவு செய்திருந்தனர்.
அத்துடன் இவர்கள் மூவரும் செல்லும் வழியில் கோலாபூரில் பெண் ஊழியரான ஸ்ருதிகா சந்த்வானியை இறக்கிவிடவும் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் பிரணவ் லேலே காரில் சென்ற 4 பேருமே கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என்றும் இவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்றும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். பிரணவ் லேலே சென்ற கார் கடைசியாக புனே சுங்கசாவடி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.
அடுத்த சுங்கச்சாவடியில் அந்த கார் மாயமாகி இருந்தது. இதனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குழப்பமாக இருந்து வந்தது.
இந்நிலையில் புனேவுக்கு அருகே உள்ள ஆறு ஒன்றில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. அது தங்களுடைய மகனின் சடலம் என சிந்தன் பெளச்சின் பெற்றோர் உறுதி செய்தனர். இதனால் பிரணவ் லேலே தமது பணியாளர்களுடன் சென்ற கார் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஆற்றில் எஞ்சிய மூவரின் உடல்களையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.