போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்: தனியார் துப்பறியும் நிறுவன தலைவரின் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொடர்பாக தனியார் துப்பறியும் நிறுவனத் தலைவர் ஹெர்ஷ்மாம் தெரிவித்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என சிபிஐ தெரிவித்துள்ளது.
டெல்லி: போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்து அமெரிக்காவின் பேர்பேக்ஸின் தலைவர் மைக்கேல் ஹெர்ஷ்மாம் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப் போவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி மைக்கேல் ஹெர்ஷ்மாமிடம் பேட்டி எடுத்திருந்தது. இந்த பேட்டி கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்டது.
இப்பேட்டியில், போபர்ஸ் பீரங்கி பேர கொள்முதலுக்காக லஞ்சமாக் பெறப்பட்ட பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டன. 1986-ல் இந்தியாவின் தலைவர்களது சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க அப்போதைய நிதி அமைச்சர் வி.பி.சிங் எனக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த விசாரணையை முடக்க ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசு முயற்சித்தது என கூறியிருந்தார்.
இப்பேட்டி வெளியான நிலையில் சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஹெர்ஷ்மாம் அளித்த பேட்டி விவரங்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டன. அவர் தெரிவித்த கருத்துகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.