பாட்னா தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்தியன் முஜாஹிதீனின் தெஷீன் அக்தர்?

குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நேற்று பீகார் தலைநகர் பாட்னா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சற்று முன்பாக பாட்னா ரயில்நிலையம் மற்றும் பொதுக்கூட்ட மைதானத்தை சுற்றி 7 இடங்களில் குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாகினர். 95 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சதியில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்துக்கு தொடர்பிருக்கலாம் என்று பீகார் போலீசார் சந்தேகிக்கின்றனர். அத்துடன் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனரான யாசின் பட்கலின் உதவியாளர் முகமது தெஷீன் அக்தர்தான் இந்த சதியின் மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்பதும் போலீசாரின் சந்தேகம்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இம்தியாஸ் அன்சாரி, தெஷீன் அக்தரின் சொந்த கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த கிராமம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ளது. அத்துடன் சிக்கிய மற்றொரு நபரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவன். இந்த இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த கிராமத்தில் ஏராளமான வெடிமருந்துகள் மற்றும் பணத்தை ஜார்க்கண்ட் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இருவரிடமும் தெஷீன் அக்தரின் இருப்பிடம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பீகார் டிஜிபி கருத்து
இதனிடையே இந்த குண்டுவெடிப்பு குறித்து கருத்து தெரிவித்த பீகார் டிஜிபி அபயானந்த், அடுத்த 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்தில் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் குறித்து திட்டவட்டமான தகவல்கள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த குண்டு வெடிப்பில் இறந்த 5 பேரில் மூவரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எஞ்சிய இரு உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications