ஆதார் அட்டை கிடைக்காத சோகத்தில் 11 வயது சிறுவன் தற்கொலை!
விசாகப்பட்டிணம்: ஆதார் அடையாள அட்டை பெற முடியவில்லை என்று மனமுடைந்து 11 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டணம் மாவட்டம் திகுவா கோலாபுட் என்ற கிராமத்தை சேர்ந்த சிறுவன் பாலகிருஷ்ணன் (11), அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.
அரசு கல்வி உதவித் தொகையை அவனது கணக்கில் இணைக்க ஆதார் அடையாள அட்டை தேவைப்படுவதாக பாலகிருஷ்ணனிடம் பள்ளி ஆசிரியர் கேட்டுள்ளார்.
ஆதார் அட்டை பெற முயன்றபோது, சிறுவனின் கை விரல் ரேகையை பதிவு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. சிறுவனின் மூன்று விரல்கள் ஒன்றாக சேர்ந்து இருந்ததால் அவனது விரல் ரேகையை பதிவு செய்ய முடியவில்லை என்று ஆதார் அதிகாரிகள் கூறிவிட்டனர்.
அரகு மற்றும் விசாகப்பட்டணம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் சிறுவனால் ஆதார் அடையாள அட்டை பெற முடியவில்லை. இதனால் வேதனை அடைந்த மாணவன் தனது வீட்டுக்கு திரும்பியுள்ளான்.
இரவு வீட்டில் அனைவரும் தூங்கியதும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். பழங்குடியின நலத்துறை அமைச்சர் ராவெல்லா கிஷோர் பாபு உத்தரவின்படி இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விரிவான அறிக்கையை பழங்குடியினர் நல துணை இயக்குநர் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.