மாப்பிள்ளைக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு காதலனை மணந்த தில்லாலங்கடி பெண்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது ரகசிய காதலனை திருமணம் செய்ய மணமகனுக்கு மயக்க மருந்து கலந்த இனிப்புகளை கொடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜுகல் கிஷோர்(25). அவருக்கும் இந்திராவதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் இந்திராவதி ஹர்பல் சிங் என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமணத்தன்று இந்திராவதி மயக்க மருந்து கலந்த இனிப்பை ஜுகலுக்கு அளித்துள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் மயங்கிவிட்டார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிகிச்சை பெற்ற பிறகு திருமண மண்டபத்திற்கு வந்தபோது இந்திராவதிக்கும், ஹர்பல் சிங்கிற்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. தன்னை வேண்டும் என்றே இந்திராவதி ஏமாற்றிவிட்டதாக ஜுகல் தெரிவித்துள்ளார்.
ஜுகல் ஒரு குடிகாரர். இதை அறிந்ததால் தான் இந்திராவதி திருமணத்தை நிறுத்திவிட்டார். ஜுகலை பற்றிய உண்மையை தன்னிடம் முதலிலேயே கூறவில்லை என்று இந்திராவதி கோபம் அடைந்தார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
ஜுகலுக்கு மயக்க மருந்து கலந்த இனிப்பு எதையும் இந்திராவதி அளிக்கவில்லை. இந்திராவதிக்கும், ஹர்பலுக்கும் திருமணம் நடத்தி வைக்க நாங்கள் தான் முடிவு செய்தோம் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஜுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் திருமணமே முடிந்துவிட்டது இனி எதற்கு புகார் என்று இருவீட்டாரும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆகிவிட்டனர்.