அழிந்து வரும் உயிரினமான டோகே கெக்கோ பல்லி.. தேடுதல் வேட்டையில் மீட்ட எல்லை பாதுகாப்பு படை!
கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்திலுள்ள வடக்கு ஆக்ரா கிராமத்தில் இருந்து அருகி வரும் டோகே கெக்கோ பல்லியை வடக்கு வங்காள எல்லைப் பாதுகாப்புப் படை இந்திய - வங்கதேச எல்லையில் மீட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் வனவிலங்கு பாதுகாப்பிற்கான எல்லை பாதுகாப்பு படையின் அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளது.
எல்லை பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ராய்கஞ்ச் செக்டாரின் 79-வது பட்டாலியன் BSF படைப்பிரிவு நேற்று தேடுதல் வேட்டையை நடத்தியது. இதில், எல்லையை ஒட்டிய பகுதியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 அடி நீளமுள்ள டோகே கெக்கோ பல்லி கண்டுபிடிக்கப்பட்டது.

டோகே கெக்கோ பல்லி
டோகே கெக்கோ (Tokay gecko) பல்லி வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் அட்டவணை I-ன் கீழ் மிகவும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பட்டியலில் இருக்கிறது. இந்த வகையான பல்லி மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுவதால், கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கின்றனர். இருப்பினும் எந்தவொரு மருத்துவ குணமும் இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
அதிக மதிப்பு
ஆனாலும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் இந்த ரக பல்லிக்கு அதிக மதிப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, மீட்கப்பட்ட பல்லியை, வனத்துறையினரிடம் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின், வனத்துறையினர்,பல்லியைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வன விலங்குகள் கடத்தல்
இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடப்பது முதல்முறையல்ல. எல்லை பாதுகாப்பு படையின் தரவுகளின்படி, வடக்கு வங்காளம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகள் சட்டவிரோத வனவிலங்கு கடத்தலுக்கு முக்கியமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 2024 முதல் 2025 வரை, எல்லை பாதுகாப்பு படையினர் இந்திய - வங்கதேச எல்லையில் அழிந்து வரும் பல்வேறு உயிரினங்கள் கடத்தலை தடுத்துள்ளனர்.
கடத்தலை தடுத்த எல்லை பாதுகாப்பு படை
400க்கும் மேற்பட்ட ஆமைகள், 200 மணல் போவா பாம்புகள், 279 புறாக்கள், 186 வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் ஒரு சிறுத்தை உட்பட பல்வேறு உயிரினங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எல்லைப் பகுதிகளில் வசிக்கும் குடிமக்கள் வனவிலங்குகள் தொடர்பான சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கண்டால், உடனடியாக அருகிலுள்ள எல்லை பாதுகாப்பு படை முகாம் அல்லது வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு
இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, வனவிலங்குப் பாதுகாப்பிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகள், அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும், சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தைத் தடுப்பதற்கும் முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications