தயாநிதி மாறன் மீதான பிஎஸ்என்எல் இணைப்பக முறைகேடு வழக்கு: அக்.23-க்கு ஒத்திவைப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான பிஎஸ்என்எல் இணைப்பக முறைகேடு வழக்கு வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: மத்திய அமைச்சராக இருந்த போது பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தயாநிதிமாறன் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் அவரது பதவியை சன்டிவியின் சுயலாபத்துக்காக முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2004-2006-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தனது வீட்டில் தனியாக டெலிபோன் எக்ஸ்சேஞ்சையே அவர் நிறுவியுள்ளார். இவற்றை தனது சகோதரன் கலாநிதி மாறனின் சன் டிவி அலுவலகத்துக்கு முறைகேடாக பயன்படுத்தியுள்ளார் என்பது வழக்கு.
ரூ.1.78 கோடி நஷ்டம்
தயாநிதிமாறனுக்கு மட்டும் 764 தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றின் பயன்பாட்டுக்கு அவர் எந்த தொகையும் செலுத்தாததால் ரூ.1.78 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. முதலில் இந்த இணைப்புகள் கோபாலபுரத்தில் உள்ள வீட்டிலிருந்தும், பின்னர் போட் கிளப் ஹவுஸ் சாலையில் உள்ள வீட்டிலிருந்தும் சன்டிவி நிறுவனத்துக்கு சென்றுள்ளது என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
6 பேர் மீது வழக்கு
இதுதொடர்பாக 2011-ஆம் ஆண்டு சிபிஐ விசாரணையை தொடங்கியது. பின்னர் 2013-ஆம் ஆண்டு தயாநிதிமாறன், பிஎஸ்என்எல்லின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், சன் டிவியின் எலக்ட்ரீசியன் ரவி, பிஎஸ்என்எல் முன்னாள் மேலாளர் கே.பிரம்மநாதன், முன்னாள் துணை பொது மேலாளர் வேலுசாமி, மாறனின் தனி செயலாளர் கௌதமன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இன்று ஆஜராக உத்தரவு
அதன்பிறகு இந்த வழக்கில் தயாநிதிமாறனின் சகோதரனும், சன்டிவி உரிமையாளருமான கலாநிதி மாறனின் பெயர் இணைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய இந்த 7 பேரும் இன்று ஆஜராக வேண்டும் என்று கடந்த மாதம் உத்தரவிடப்பட்டது.
தயாநிதிமாறன் ஆஜர்
இதன்படி சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதிமாறன், கௌதமன், கண்ணன் உள்ளிட்டோர் சென்னை சிபிஐ ஆஜராகினர். இன்றைய விசாரணையின் போது வழக்கு விசாரணை வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.